தாதிமைப் பணியில் ஆண்களுக்கு நிச்சயம் இடமுண்டு..பெண்களுக்கு இணையாகப் பணிபுரியமுடியும்: ஆண் தாதியர்
'தாதி' என்றாலே பெண். இப்படித்தான் பலருக்கும் எண்ணத் தோன்றும்.

(படம்: Woodlands Health Campus, Singapore General Hospital, Alexandra hospital)
'தாதி' என்றாலே பெண்.
இப்படித்தான் பலருக்கும் எண்ணத் தோன்றும்.
தாதிமைப் பணியில் ஆண், பெண் வித்தியாசம் இல்லை..விருப்பம்தான் முக்கியம் என்கின்றனர், ஆண் தாதியர் சிலர்.
இன்று தாதியர் தினம்.
அதையொட்டி, ஆண் தாதியர் சிலருடன் பேசியது, 'செய்தி'.
கடந்த ஆண்டு நிலவரப்படி, சிங்கப்பூரில் சுமார் 4,900 ஆண் தாதியர் பணிபுரிவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த எண்ணிக்கை, சிங்கப்பூர்த் தாதியர் சங்கத்தில் பதிவுசெய்துகொண்டுள்ள தாதிகளின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 12 விழுக்காடு மட்டுமே..
தாதிமைப் பணியில் ஆண்கள் ஏன் அவ்வளவாகச் சேர்வதில்லை?
- தாதிமைப் பணியைப் பெண்களுக்குச் சொந்தமானது என்று எண்ணுவதால்..
அலெக்சாண்ட்ரா (Alexandra) மருத்துவமனையில் பணிபுரியும் திரு. திருச்செல்வன் சிவாராஜா, தொடக்கத்தில் சில நண்பர்களும் உறவினர்களும் தம்மைக் கேலி செய்ததாகச் சொன்னார்.
(படம்: Alexandra hospital)

பெண்களுக்கு இயற்கையாகவே தாய்மை குணம் உண்டு.. இருப்பினும், ஆண்களும் அதற்கு ஈடான அளவில் பரிவு காட்டமுடியும்.
(படம்: Woodlands Health Campus)

"அது மட்டுமின்றி, நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் அணுகுமுறை வேறுபடும். அனைவரிடத்திலும் தாய்மை குணத்தை வெளிப்படுத்துவது அவசியம் என்று சொல்லமுடியாது," என்றார், உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்துக்குக் கீழ் பணிபுரியும் திரு. ஹரி ஷோரன் சில்வராஜூ.
- தாதியரின் பணி குறித்த தவறான எண்ணம்
தாதியரின் பணி, மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதும், நோயாளிகளைக் கழிப்பறைக்கு அழைத்துச்செல்வதும் சுத்தம் செய்வதும்தான் என்று பலர் தவறாக எண்ணலாம்.
(படம்: Singapore General Hospital)

தாதியர் பணியில் வெவ்வேறு பொறுப்புகள் உள்ளன. அவை ஒவ்வொரு நாளும் வித்தியாசமான அனுபவத்தை வழங்குகின்றன.
(படம்: Alexandra hospital)

அவசரப் பராமரிப்பு நிலையத்தில் பணிபுரியும் திரு. திருச்செல்வன்,
ஒவ்வொரு நாளும் ஒரு புதுவகைச் சவாலாக அமைகிறது என்றும் தாம் வேலையில் தொடர்ந்து நிலைத்திருக்க, அந்தப் பரபரப்புதான் முக்கியக் காரணம் என்றும் சொன்னார்.
தாதியரின் பணியில் சம்பளமும் வேலை முன்னேற்றமும் எப்படி?
2006-ஆம் ஆண்டில் தாதியாகச் சேர்ந்த திரு. தினேஷ், அப்போது ஆண்கள் அந்தப் பணியில் சேர்வதைப் பலர் தாழ்வாகக் கருதினர் என்று சொன்னார்.
சம்பளம் குறைவாக இருக்கும்.. குடும்பத்தைத் தாங்கமுடியாது...முன்னேற்றமும் இருக்காது என்று பலர் எண்ணியதுண்டு. ஆனால் நிலைமை மாறிவிட்டது. தாதியர் தற்போது அங்கீகரிக்கப்படுகின்றனர். நான் துணைத் தாதியிலிருந்து பல நிலைகள் முன்னேறி தற்போது உயர்நிலைப் பயிற்சித் தாதியாக மாறவிருக்கிறேன்
என்று அவர் சொன்னார்.
பணியிடை மாற்றம் செய்வோர் தாதிமைப் பணியைப் பரிசீலிக்கலாம்
சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படையும் நிலையில், சுகாதாரப் பராமரிப்புச் சேவை ஊழியர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும்.
இந்நிலையில், பணியிடை மாற்றம் செய்வோர் தாதிமைப் பணியைப் பரிசீலனை செய்யலாம் என்று மூன்று முறை வேலையை மாற்றியுள்ள திரு. ஹரி சொன்னார்.
(படம்: Woodlands Health Campus)

எந்தவொரு வேலையிடமும் ஒழுங்காகச் செயல்பட சமநிலை இருப்பது அவசியம். எப்படிப் பெண்களுக்கு பங்கு உள்ளதோ அதேபோல் ஆண்களுக்கும் தாதிமைப் பணியில் பங்கு உள்ளது என்று கூறுகின்றனர், தாதியர்.