'வேலை அனுமதி புதுப்பிக்கப்படாத வெளிநாட்டு ஊழியர் Facebook-இல் பொய்த்தகவல் பதிவிட்டார்'
சிங்கப்பூரில் வேலை அனுமதி புதுப்பிக்கப்படாத வெளிநாட்டு ஊழியர் ஒருவர் Facebook-இல் பொய்த்தகவல் வெளியிட்டதாக மனிதவள அமைச்சு கூறியுள்ளது.
19 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணிபுரிந்த ஸாக்கிர் ஹுசென் (Zakir Hossain) வேலை அனுமதி அட்டை புதுப்பிக்கப்படுவதற்குத் தகுதி பெறவில்லை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களைப் பற்றிப் பலமுறை எழுதியுள்ள அவரின் வேலை அனுமதி அட்டையை மீண்டும் மீண்டும் புதுப்பித்துள்ளதாக மனிதவள அமைச்சு சொன்னது.
கடந்த ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி திரு. ஸாக்கிர் Westlite Tukang விடுதியின் சூழல் குறித்து எழுதியிருந்தார்.
அப்போது ஊழியர் விடுதியில் COVID-19 சுகாதார விதிமீறல்கள், மருத்துவக் கவனிப்பில் குறைபாடு, பொட்டல உணவின் மோசமான தரம் ஆகியவை குறித்த குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டன.
வெளிநாட்டு ஊழியர்களைக் 'கொத்தடிமைகள்' என்றும் தங்கும்விடுதிகளை 'அடிமை முகாம்கள்' என்றும் திரு. ஸாக்கிர் வருணித்ததாக அமைச்சு சொன்னது.
ராணுவ வீரர்களும் கனரக வாகனங்களும் தங்கும்விடுதியைச் சுற்றி வளைத்துள்ளதாகவும் அவர் Facebook-இல் பதிவிட்டார்.
அது பொய் என்றும் காவல்துறையினர் தங்கும்விடுதிக்கு அருகில் முன்னெச்சரிக்கையாகப் பணியமர்த்தப்பட்டனர் என்றும் அமைச்சு விளக்கியது.
ஆடவரின் பொய்க்கூற்றுகள் பொது ஒழுங்கைக் கெடுக்கக்கூடிய வகையில் Westlite Tukang விடுதி ஊழியர்களைச் செயல்படத் தூண்டியிருக்கலாம் என்று அது சொன்னது.
கிருமிப்பரவலின்போது வெளிநாட்டு ஊழியர்களின் நலனைப் பாதுகாக்க அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளை அமைச்சு சுட்டியது.
"அவரது வேலை அனுமதி அட்டை காலாவதி ஆகியுள்ளது. அவருக்கு வேலை ஏதும் இல்லாத நிலையில், திரு. ஸாக்கிர் சிங்கப்பூரில் தொடர்ந்து வசிக்கமுடியாது," என்று அமைச்சு தெரிவித்தது.