ஆண் வேலையா? நாங்களும் செய்வோம்! - மிருதங்கத்தை லாவகமாகக் கையாளும் இளம்பெண்
நவீன சிங்கப்பூரில் பாரம்பரிய இந்திய இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொள்ளும் இளையர்கள் பலர் உள்ளனர்.
#CelebratingSGWomen
நவீன சிங்கப்பூரில் பாரம்பரிய இந்திய இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொள்ளும் இளையர்கள் பலர் உள்ளனர்.
அதில் பொதுவாக ஆண்கள் தாள வாத்தியக் கருவிகளிலும், பெண்கள் மீட்டும் கருவிகளிலும் சிறந்து விளங்குவது இயல்பு.
ஆனால் அதற்கு விதிவிலக்கு..... 15 வயது ஹரிப்ரியா ஸ்ரீநிவாசன்.
மிருதங்கத்தை ஆசை ஆசையாய் வாசித்து அசத்துகிறார் இவர்.
சிங்கப்பூர்ப் பெண்களைக் கொண்டாடும் இந்த ஆண்டு, ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதாகக் கருதப்படும் துறைகளில் கால் பதித்த பெண்களைச் சந்திக்கிறது, 'செய்தி'.
மிருதங்கம் பொதுவாக 4 கிலோகிராம் முதல் 13 கிலோகிராம் வரை எடை கொண்டிருக்கும்...
அதைத் தூக்குவதும், சுருதி சேர்ப்பதும் சுலபமல்ல.
கனமான அதைத் தொடர்ந்து வாசித்தால் தோள்கள் அகலமாகும்...கைகள் கரடுமுரடாக ஆகிவிடும்...
கைகளில் உள்ள மென்மையை இழக்க நேரிடும்....
இப்படி பெண்களைத் தயங்கச் செய்யும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஆனால், அந்தக் கூற்றுகளில் நம்பிக்கையை விடுத்துத், தமது திறமையில் நம்பிக்கை வைத்தார் ஹரிப்ரியா.
தேசியக் கலைகள் மன்றம் ஏற்பாடு செய்த 2020 தேசிய இந்திய இசை போட்டியில் கலந்துகொண்டு, இடைநிலைப் பிரிவில் வெற்றி பெற்றார்.
7 வயதிலிருந்தே மிருதங்கத்தை வாசிக்கிறார், ஹரிப்ரியா.
எனக்கு லயம் மீது அதிக ஆர்வம் உண்டு. என் தந்தை தான் அதனைக் கண்டறிந்து, கலையைக் கற்றுக்கொள்ள ஊக்குவித்தார். அந்த வயதில் மிருதங்கத்தைக் கையாள்வது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் பழகிக்கொண்டேன்....காரணம் எனது ஆர்வம்,
என்கிறார்.
இருப்பினும், மிருதங்கத்தை வாசிக்கும் ஹரிப்ரியாவின் பயணத்தில் பல சவால்கள். தனிப்பட்ட உணர்வுகள் ஒரு பக்கம்... மற்றவர்களின் கண்ணோட்டம் மறுபக்கம்..
பெண் ஒருவர் மிருதங்கம் வாசிப்பதைப் பலர் பாராட்டினாலும், ஆண்களுக்கு ஈடாக வாசிக்கமுடியாது என்ற எண்ணம் இன்னமும் நிலவுவதாகச் சொல்கிறார் இவர்.
பெண்களால் முடியாது என்று பலர் கூறுவார்கள். ஆனால் பெண்களுக்குத் தேவை...தன்னம்பிக்கை. அதை மட்டுமே நம்பவேண்டும்,
என்பது இந்த இளம் பெண்ணின் ஆணித்தரமான நம்பிக்கை.