குரங்கம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டோர் வீட்டிலேயே குணமடையலாம் - சுகாதார அமைச்சு
குரங்கம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டோர்
வரும் திங்கட்கிழமை (22 ஆகஸ்ட்) முதல் தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாகக் குணமடையலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்கள் அதற்குத் தகுதிபெற்றிருப்பதை மருத்துவர் கூறவேண்டும்;
அவர்களின் வீட்டில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்தும் வகையில் அறையோடு சேர்ந்த கழிப்பறையும் மற்றவர்கள் பயன்படுத்த வேறொரு ஒரு தனிக் கழிப்பறையும் இருக்கவேண்டும்.
வீட்டில் 12 வயதுக்குக்கீழ் உள்ள பிள்ளைகள், கர்ப்பிணிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆகியோர் இருக்கக்கூடாது.
உடல்நிலை மோசமாகும் ஆபத்து அதிகம் உள்ளோர் தொடர்ந்து மருத்துவமனையில் பராமரிக்கப்படுவர்.
குரங்கம்மைத் தொற்றுப் பரவும் அபாயம் குறையும்வரை பாதிக்கப்பட்டோருக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளும் உத்தரவு விதிக்கப்படும்.
குரங்கம்மைத் தொற்றால் பாதிக்கப்படுவோர் பொதுவாக 2 முதல் 4 வாரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய அவசியமின்றி குணமடைந்துவிடுவதைப் புள்ளி விவரங்கள் காட்டுவதாக அமைச்சு சொன்னது.
நெருங்கிய தொடர்புமூலமே அது பரவுவதால் சாதாரணமாகப் பொதுமக்களிடையே பரவும் அபாயம் குறைவு என்று அது தெரிவித்தது.
வீட்டில் குணமடைவோர் தொலை மருத்துவச் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.