சிங்கப்பூர்க் கலைத்துறைக்குப் பெரும் பங்காற்றிய மூத்த நடன குரு சாந்தா பாஸ்கர் காலமானார்
கலாசார விருதுபெற்ற மூத்த நடன ஆசிரியரும் சிங்கப்பூர்க் கலைத்துறைக்குப் பெரும்பங்காற்றியவருமான திருமதி சாந்தா பாஸ்கர் காலமானார். அவருக்கு வயது 82.
1939ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த அவர் தம்முடைய பதினாறாவது வயதில் தமது கணவர் K பாஸ்கரோடு சிங்கப்பூருக்கு வந்து கணவரின் பாஸ்கர் நடனப் பள்ளியில் பங்காற்றினார்.
இந்தியத் தமிழகத்தின் அரசாங்கம் அவருக்குக் கர்னாடக இசையில் பட்டயச் சான்றிதழ் வழங்கியது.
திருமதி சாந்தா பாஸ்கரின் கலைப்படைப்புகளின் தனிச்சிறப்பே அவற்றில் சேர்க்கப்படும் பல்லின அம்சங்களே. மலாய், சீன, தாய்லாந்து நடனங்களில் இருக்கும் சில அம்சங்களை அவரின் நடனப் படைப்புகளில் சேர்த்துப் புதுமை படைத்தார்.
1975ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இந்திய திரைப்பட, நாடகக் கழகம் அவருக்கு நாட்டிய ராணி விருதை வழங்கிக் கௌரவித்தது. சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் அவருக்கு கலாரத்னா விருதை அளித்துச் சிறப்பித்தது.
1987ம் ஆண்டு திருமதி சாந்தா பாஸ்கர் நிருத்யாலயா கவின் கழகத்தைத் தோற்றுவித்தார்.
60 ஆண்டுக்கு மேலாக ஆயிரத்துக்கும் அதிகமான மூன்று தலைமுறை மாணவிகளை உருவாக்கிய திருமதி சாந்தா பாஸ்கர், மிகச்சிறந்த கலைப்படைப்புகளைக் கொடுத்த பெருமைக்குரியவர்.
நாளைய தலைமுறையினருக்கு இந்தியப் பாரம்பரிய நடனக் கலையின் மீதான ஆர்வத்தைத் தொடர்ந்து வளர்ப்பதற்கான பாதையைத் திரு, திருமதி பாஸ்கர் தம்பதி அமைத்துத் தந்துள்ளனர். மறைவுக்குப் பின்னும் இருவரின் கலைப்பயணம் தொடரும், வளரும்.