சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
தீபாவளி பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள ரயில்களில் அலங்காரங்களுடன் QR குறியீடு
தீபாவளிக் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது.
அதைப் பறைசாற்றும் விதமாக ரயில்களில் அற்புதமான அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன.
நிலப் போக்குவரத்து ஆணையமும், LISHA எனும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கமும் இணைந்து ரயில்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகள் ஆகியவற்றில் தீபாவளி அலங்காரங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
மேலும், தீபங்கள், மருதாணி, இசை, நடனம் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களையும் மக்கள் அறிந்துகொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.
அதற்கு ஒரு QR குறியீடு ரயில்களிலும் நிலையங்களிலும் உள்ளது.
அதுவே இந்த ஆண்டின் சிறப்பு அம்சம் என்றது LISHA.
ரயில்கள்:
- ரயில்களின் உட்புறம்
- லிட்டில் இந்தியா, ஜூரோங் ஈஸ்ட் ஆகிய ரயில் நிலையங்கள்
பேருந்துகள்:
சில பேருந்துகளின் வெளிப்புறத்திலும், பிடோக் ஒருங்கிணைந்த போக்குவரத்து நடுவத்திலும் அலங்காரங்களைக் காணலாம்.
நவம்பர் 13 வரை அலங்காரங்களை மக்கள் கண்டு ரசிக்க முடியும்.
இவ்வாண்டின் கருப்பொருள்:
தபேலா, வீணை போன்ற பாரம்பரிய இந்திய இசைக்கருவிகளைச் சுவரோவியங்களில் பார்க்கலாம். நடனமணிகள், விளக்குகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
தரைகளில் விளக்குகளுடன் கூடிய வண்ணமயமான கோலங்கள்.
இன்று முதல் இடம்பெறும் அலங்காரங்களைப் போக்குவரத்து அமைச்சர் S. ஈஸ்வரன் பார்வையிட்டார்.
'செய்தி'-யிடம் பேசிய அவர்,
“ஈராண்டுகளுக்குப் பிறகு தீபாவளிப் பண்டிகையைத் தடைகள் இல்லாமல் கொண்டாடவிருக்கிறோம். நம் குடும்பத்தினர், உற்றார் உறவினர், அனைவரோடும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்கு இது ஒரு வாய்ப்பு”
என்றார் அமைச்சர்.
அழகான தீபாவளி அலங்காரங்களைக் காணொளியில் கண்டு மகிழுங்கள்!