2 வயது மகளைக் கொன்று சிதைவுகளை மறைத்து வைத்த ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை

(கோப்புப் படம்: CNA/Try Sutrisno Foo)
சிங்கப்பூரில் 2 வயது மகளைக் கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த 35 வயது ஆடவருக்கு 18 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
பின்னணி
மகள் 2011ஆம் ஆண்டில் பிறந்தபோது ஆடவர் போதைப்பொருள் குற்றங்களுக்காக மறுவாழ்வு நிலையத்தில் இருந்தார்.
குழந்தையைத் தாயார் பார்த்துக்கொள்ளமுடியாது என்று தீர்மானிக்கப்பட்டதால் பிள்ளை வளர்ப்புப் பெற்றோரின் கவனிப்பில் 2 ஆண்டுகள் இருந்தது.
2013இல் அது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் மகளைப் பலமுறை துன்புறுத்தியதாக அரசாங்கத்தரப்பு வழக்கறிஞர் சொன்னார்.
ஆடவர் அவளைப் பல்வேறு பொருள்களைக் கொண்டு அடித்ததாகக் கூறப்பட்டது.
பிள்ளை மாண்டபோது பெற்றோர் உடலை எரித்து, சிதைவுகளை ஒரு சமையல் சட்டியில் வைத்திருந்தனர்.
அதை வீட்டுச் சமையலறையில் அடுப்புக்கு அடியில் பல ஆண்டுகளாக வைத்தனர்.
மகளின் மறைவுக்கு அவர்கள் பல கட்டுக்கதைகளைக் கூறினர்.
தாயார் சில குற்றங்களுக்காகச் சிறைக்குச் சென்றபோது பிள்ளையின் மாமா சட்டியைத் திறந்து பார்த்தார்.
காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
தாயாருக்கு எதிரான வழக்கு தொடரும்.