மியன்மார் பணிப்பெண் மரணம்: குற்றச்சாட்டைக் குறைக்கச் சொல்லிப் புதிய வழக்கறிஞரை நாடினார் முதலாளி
சிங்கப்பூரில் 24 வயது மியன்மார் பணிப்பெண்ணை துன்புறுத்தி மரணம் விளைவித்த முதலாளி தம் மீதான குற்றச்சாட்டைக் குறைக்குமாறும், வழக்கில் தம்முடைய அடையாளத்தை வெளியிடத் தடை கோரியும் புதிய வழக்கறிஞரை நாடியுள்ளார்.

(படம்: Facebook/Helping Hands for Migrant Workers, Singapore and Nisha Karyn)
சிங்கப்பூரில் 24 வயது மியன்மார் பணிப்பெண்ணை துன்புறுத்தி மரணம் விளைவித்த முதலாளி தம் மீதான குற்றச்சாட்டைக் குறைக்குமாறும், வழக்கில் தம்முடைய அடையாளத்தை வெளியிடத் தடை கோரியும் புதிய வழக்கறிஞரை நாடியுள்ளார்.
பியாங் ஙாய் டோன் (Piang Ngaih Don) எனும் பணிப்பெண்ணை, 2015- இலிருந்து துன்புறுத்தி வந்தார் அவருடைய முதலாளியான 40-வயது காயத்திரி.
பணிப்பெண்ணை ஏறி மிதிப்பது, குத்துவது, அறைவது, உதைப்பது, பொருள்களால் அடிப்பது போன்ற துன்புறுத்தல்களில் அவர், ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
போதிய உணவு கொடுக்காததால், பணிப்பெண் உடல் எடை சுமார் 15 கிலோகிராம் குறைந்து, 24 கிலோகிராம் ஆனது.
தொடர் துன்புறுத்தல்களால் 2016 ஜூலை 26-ஆம் தேதி பணிப்பெண் மாண்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் காயத்திரி இல்லப் பணிப்பெண்ணைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்
காயத்திரி மீது கொலைக் குற்றம் சாட்டுமாறு தலைமைச் சட்ட அதிகாரி பரிந்துரைத்திருந்தார்.
ஆனால், சான்றுகளின் அடிப்படையில் அது நோக்கமில்லாக் கொலைக் குற்றச்சாட்டாக பதிவு செய்யப்பட்டது.
அதற்காக காயத்திரிக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்பதால் குற்றச்சாட்டைக் குறைக்குமாறு கோரிக்கை விடுக்க அவர் தரப்பு புதிய வழக்கறிஞரை நாடியது.
காயத்திரிக்குக் குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்குமாறு புதிய வழக்கறிஞர் இன்று நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.
ஜூன் 22ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும்.
காயத்திரியின் கணவர், தாயார் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.