முதல்முறையாக சிங்கப்பூரின் பிறந்தநாளுக்காக ஒளியூட்டப்படவுள்ள தேசிய நினைவுச் சின்னங்கள்
முதல்முறையாக சிங்கப்பூரின் பிறந்தநாளுக்காக ஒளியூட்டப்படவுள்ள தேசிய நினைவுச் சின்னங்கள்

படங்கள்: நித்திஷ் செந்தூர்
சிங்கப்பூரின் 55ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு 10 தேசிய நினைவுச் சின்னங்கள் முதல்முறையாக ஒளியூட்டப்படவுள்ளன.
பிராஸ் பாசா, பூகிஸ், குடிமை வட்டாரம் ஆகியவற்றில் அமைந்துள்ள நினைவுச் சின்னங்கள் சிவப்பு, வெள்ளை நிறங்களில் மிளிரவுள்ளன.

ஒளியூட்டப்படும் தேசிய நினைவுச் சின்னங்கள்...
1. ஆர்மேனியன் தேவாலயம்
2. ஆசிய நாகரிக அரும்பொருளகம்
3. The Cathedral of the Good Shepherd தேவாலயம்
4. மத்திய தீயணைப்பு நிலையம்
5. CHIJMES
6. எஸ்பிளனேட்
7. சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடம்
8. சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம்
9. The Arts House
10. விக்டோரியா கலை அரங்கம்
நாட்டு நிர்மாணத்தில் அந்த 10 கட்டடங்களும் முக்கிய அங்கம் வகித்துள்ளன. அதே நேரத்தில் சிங்கப்பூர் வரலாற்றின் வெவ்வேறு அத்தியாயங்களை அவைப் பிரதிபலிக்கின்றன.
நமது தேசிய நிறங்களான சிவப்பும், வெள்ளையும் சிங்கப்பூரர்களின் ஒருமித்த பண்புகளைப் பிரதிபலிக்கின்றன. பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் அதே வேளையில் நாடு அடைந்துள்ள முன்னேற்றையும் அந்த நிறங்கள் பறைசாற்றுகின்றன. தற்போது உள்ள சிரமமான காலத்தைச் சிங்கப்பூரர்கள் கடக்க ஒளியூட்டு ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறோம்
என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் தோங் (Edwin Tong) தெரிவித்தார்.

தேசிய மரபுடைமைக் கழகம், பல்வேறு அமைப்புகளுடனும், கலாசார, சமூக இளையர் துறை அமைச்சுடனும் இணைந்து அதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
இம்மாதம் 23ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 30 ஆம் தேதி வரை தேசிய நினைவுச் சின்னங்கள் ஒளியூட்டப்பட்டிருக்கும்.
சில கட்டடங்கள் இரவு 7 மணியிலிருந்தும், மற்ற சில, இரவு ஏழரை மணியிலிருந்து ஒளியூட்டப்படும்.
ஒளியூட்டு நள்ளிரவு 12 மணிவரை இடம்பெறும்.
சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் இவ்வாண்டின் தேசிய தினக் கருப்பொருளான 'Together, A Stronger Singapore' எனும் வாசகம் 4 அதிகாரத்துவ மொழிகளிலும் சிறப்பு ஒளியூட்டாக இடம்பெறும்.