சிங்கப்பூரில் குடும்ப வன்முறையை வேரறுக்க முடியுமா?
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு குடும்ப வன்முறையைக் கண்டறிந்து, அவற்றைக் கையாள இரண்டு முக்கிய உத்திகளைப் பின்பற்றுவதாக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (Masagos Zulkifli) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குடும்ப வன்முறையைக் கண்டறிந்து முன்கூட்டியே புகாரளிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்றார் அவர்.
இதுவரை 12,500க்கும் அதிகமானோர் குடும்ப வன்முறை விழிப்புணர்வுப் பயிற்சிக்குச் (Domestic Violence Awareness Training) சென்றுள்ளனர். குடும்ப வன்முறைக்கான அறிகுறிகளைக் கண்டு புகாரளிக்க இது கற்றுக்கொடுக்கிறது.
குடும்ப வன்முறை மீண்டும் மீண்டும் நடப்பதைத் தடுக்க அமைச்சு ஆதரவு வழங்குகிறது.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவ குடும்பச் சேவை நிலையங்கள் நிபுணர்களுடனும் நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றுவதாக அமைச்சர் சொன்னார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மறுஆய்வு செய்யும். புதிய தடுப்பு நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்படலாம் என்று அமைச்சர் கூறினார்.