சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
தலைசிறந்த திறனாளர்கள்... மாதம் $30,000 சம்பளம்...எத்தகைய துறைகளில் பணியாற்ற வேண்டும்?
தலைசிறந்த திறனாளர்களைச் சிங்கப்பூருக்கு ஈர்க்க வகைசெய்யும் ONE Pass என்ற வேலை அனுமதித் திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
அதற்கான சம்பளத் தகுதி?
குறைந்தது 30,000 வெள்ளி மாதச் சம்பளம்...
'எங்கள் வருடாந்திரச் சம்பளமே அதுதானே' எனச் சிலர் கூறலாம்.
மாதத்திற்குக் குறைந்தது 30,000 வெள்ளி சம்பளம் பெற வேண்டுமென்றால் அவர்கள் எந்த மாதிரி வேலையில் இருக்க வேண்டும்?
நிறுவனத்தில் ஒரு வேலை என்பதையும் தாண்டி அவர்கள் புத்தாக்கத் திறனாளர்களாக இருக்கவேண்டும் என்கிறார் மனிதவளத் துறை நிபுணர் அரவிந்த் மதுசூதனன்.
"அவர்கள் வித்தியாசமாக யோசிப்பவர்கள். புதுமையானவற்றை உருவாக்குபவர்கள்."
"அத்தகையோர் தங்கள் திறன்களையோ புதிய தொழில்நுட்பத்தையோ இங்கே கொண்டுவர வேண்டும் என்பதுதான் ONE Pass திட்டத்தின் நோக்கம்."
"அதன் மூலம் சிங்கப்பூரில் புதிய துறைகள் வளர்ச்சி பெறுவதோடு, உள்ளூர்வாசிகளுக்கான வேலை வாய்ப்பும் கூடும்"
என்று திரு. அரவிந்த் கூறினார்.
எத்தகைய துறைகளைச் சேர்ந்தோரை ஈர்ப்பது அந்தத் திட்டத்தின் நோக்கம்?
அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களும் வரவேற்கப்படுவதாக எரிசக்தி ஆலோசனை நிறுவனமொன்றை நடத்திவரும் கீதா தெரிவித்தார்.
"அவர்கள் தலைசிறந்த விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாகவோ விளையாட்டாளர்களாகவோ இருக்கலாம்."
"உள்ளூர்த் திறனாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது, நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுப்பது என அவர்களால் பல பயன்கள் உண்டு."
"குறிப்பிட்டுக் கூறவேண்டும் என்றால் தொழில்நுட்பம், விளையாட்டு, கலை, பசுமை பொருளியல், நீடித்த நிலைத்தன்மை, நிதித் தொழில்நுட்பம்."
"எந்தத் துறை என்பதைவிட சிங்கப்பூரின் எதிர்காலத்திற்கு அவர்கள் எப்படிப் பங்களிப்பார்கள் என்பதில் அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது"
என்றார் திருவாட்டி கீதா.
பிரிட்டன், ஹாங்காங், டுபாய் எனப் பல இடங்களில் ஏற்கனவே அத்தகைய திட்டம் நடைமுறையில் உள்ளது.
சிங்கப்பூர் தொடர்ந்து போட்டித்தன்மை மிக்க நாடாக விளங்க, திறனாளர்களை ஈர்ப்பது முக்கியம் எனக் கருதப்படுகிறது.