Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"இடைவிடாத மழை... வெளியே செல்லத் தயங்கும் மக்கள்.. பொங்கல் பொருள்களை விற்கும் அக்கம்பக்கக் கடைகள்"

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் எப்போதும் இல்லாத அளவுக்கு இடைவிடாது மழை பெய்துவருகிறது.

பொங்கல் பண்டிகைக்குத் தயாராகும் மக்கள் வெளியே சென்றுவரச் சிரமப்படுகின்றனர்.

பொங்கலுக்கான பொருள்களை முடிந்தவரை அக்கம்பக்கக் கடைகளில் வாங்கிக்கொள்ள முடிவெடுத்துள்ளதாக நேயர்கள் சிலர் 'செய்தி'யிடம் தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவர் புக்கிட் மேரா வட்டாரத்தில் வசிக்கும் அமுதா.

"அக்கம்பக்கக் கடைகளுக்குச் செல்வேன்...."

"வழக்கமாக தேக்காவுக்குச் சென்றுதான் பொங்கல் பொருள்களை வாங்குவேன். இம்முறை மழையால் அங்குச் செல்ல சிரமமாக இருக்கிறது. அதனால் என்னுடைய வட்டாரத்திலுள்ள கடையிலேயே பொங்கலுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ள முடிவெடுத்துள்ளேன். இன்று மாலைதான் கடைக்குச் சென்று பொருள்கள் வாங்குவேன்".

"விலையில் மாற்றம்....."

"தேக்காவுக்குச் சென்று பொருள் வாங்குவதற்கும் அக்கம்பக்கக் கடைகளில் வாங்குவதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. இங்கும் எல்லாமே கிடைக்கின்றன. விலையிலும் மாற்றம் பெரிதாக இல்லை. அப்படியே விலை ஏற்ற இறக்கமாய் இருந்தாலும் போக்குவரத்துச் செலவுடன் ஒப்பிட்டால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்" என அமுதா சொன்னார்

மழைக்கு இடையே பொங்கல் பண்டிகை வார நாளில் வருவதால் அதையும் சமாளிக்க வேண்டியிருப்பதாகக் கூறுகிறார் மகாலட்சுமி.

ஹவ்காங் வட்டாரத்தைச் சேர்ந்த இவர் வீட்டிலேயே அழகுக் கலைச் சேவையை வழங்கிவருகிறார்.

"பொங்கல் வார நாளில் வருவதால் செய்யும் தொழிலைத் தள்ளிப் போட முடியாது. வாடிக்கையாளர்கள் கேட்கும் நேரத்தில் அவர்களுக்கு அழகுக் கலை சேவையை வழங்குவேன். பண்டிகை என்றாலும் தொழிலும் முக்கியம்".

ஒருவேளை பொங்கல் நாளில் வேலை இருந்தால் அதனை முடித்துவிட்டு பொங்கல் வைக்கப்போவதாக மகாலட்சுமி சொன்னார்.

மழைக்காலத்தில் கடைகளில் வியாபாரம் எப்படி இருக்கிறது என்பதையும் 'செய்தி' கேட்டறிந்தது.

"அடிக்கடி வரும் வாடிக்கையாளர்களைப் பார்க்கிறோம்....."

"மழையாக இருந்தாலும் எங்களுடைய கடை MRT நிலையத்திற்கு மிக அருகில் இருப்பதால் கடைக்கு வந்துபோவதில் சிலருக்கு வசதியாக இருக்கிறது. அடிக்கடி வந்துபோகும் வாடிக்கையாளர்களைக் காண முடிகிறது. நேற்றிலிருந்து நல்ல கூட்டம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்னும் அதிகமானவர்கள் வந்து பொங்கல் பொருள்களை வாங்கிச் செல்கிறார்கள்" என்று கூறினார் Selvi Stores Pte Ltd கடை இயக்குநர் எழிலன்.

"இல்லாத பொருளையும் வந்து கேட்டு வாங்குகிறார்கள்...."

"புதிதாகத் தொடங்கப்பட்ட வியாபாரம் என்றாலும் அடிக்கடி வந்துபோகும் வாடிக்கையாளர்கள் பொங்கலுக்கான பொருள்களை வாங்கி நல்ல ஆதரவு தருகின்றனர். அதனால் பொங்கலுக்கு வேண்டிய பொருள்களைக் கடைக்குத் தருவிப்பதில் எனக்கு ஆர்வமாக இருக்கிறது" என்றார் கிளமெண்டி வட்டாரத்தில் பலசரக்குக் கடை நடத்தும் லலிதா.

"மாலையில் அதிகமான வாடிக்கையாளர்கள் வர வாய்ப்புண்டு......"

"மழையாக இருப்பதால் பண்டிகை காலம் அல்லாமல் வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காணப்படும் கூட்டத்தை லிட்டில் இந்தியாவில் பார்க்க முடியவில்லை. இன்றும் மழை பெய்துகொண்டுதான் இருக்கிறது. இன்று மாலையில் இன்னும் அதிகமானோர் பொருள் வாங்க இந்த வட்டாரத்துக்கு வர வாய்ப்புண்டு" என்றார் Karthika Enterprises Pte Ltd கடை ஊழியர் கோபு குமார்.

"கடைகளில் பொங்கல்....."

பொங்கல் பொருள் விற்பனை ஒருபுறம் நடந்தாலும் சில கடைகளிலும் பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுவதுண்டு. அது பற்றியும் கோபுகுமார் பகிர்ந்துகொண்டார்.

"கடையில் பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளை நாளை இரவு செய்வோம். பொங்கலன்று கடையிலுள்ள அனைவரும் சேர்ந்து பொங்கல் வைத்து மகிழ்வோம். அதன் மகிழ்ச்சியே தனிதான்" என்றார் அவர்.

அளவில்லா மகிழ்ச்சி தரும் பொங்கலைக் கொண்டாடி மகிழ அனைவருக்கும் 'செய்தி'யின் வாழ்த்துகள்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்