சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
வேக வேகமாக முன்பதிவாகும் 'பொன்னியின் செல்வன்' நுழைவுச்சீட்டுகள் என்று கூறும் திரையரங்குகள்
செப்டம்பர் 30....
'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தைக் காண தமிழ்த் திரையுலக ரசிகர்கள் காத்திருக்கும் நாள்.
சிங்கப்பூர் ரசிகர்கள் மத்தியிலும் அந்தத் திரைப்படத்தைப் பார்ப்பதற்கான ஆர்வம் மேலோங்கி இருக்கிறது.
அதற்கு ஆதாரம் சூடுபிடித்துள்ள நுழைவுச்சீட்டு விற்பனை.
"முதல் நாளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை அபாரமாக இருக்கிறது. அன்றைய நாள் இரவு 9 மணிக்குத் திரைப்படத்தைக் காண இதுவரை (27 செப்டம்பர்) 200 நுழைவுச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன."
என சிட்டி ஸ்குவேர் (City Square) கடைத்தொகுதியில் உள்ள Golden Village திரையரங்கத்தின் மேலாளர் விவியன் (Vivien) செய்தியிடம் கூறினார்.
"இப்போதைக்கு இரவு 9 மணிக்கான இருக்கைகள் பெரும்பாலும் நிறைந்துவிட்டன. திரைப்படம் வெளியாகும் நாளில் ரசிகர்கள் நேரடி முகப்புகளில நுழைவுச்சீட்டுகளை வாங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்"
என விவியன் சொன்னார்.
"Covid-19 பெருந்தொற்றின்போது, திரையரங்குகளில் ஒரு மீட்டர் இடைவெளியில் அமர்ந்துதான் ரசிகர்கள் படம் பார்த்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. எப்போதும் போல அருகருகே அமர்ந்து படம் பார்க்கலாம் என்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது."
என்றும் விவியன் தெரிவித்தார்.
"பெரும்பாலோர் நுழைவுச்சீட்டுகளை இணையம் வழி முன்பதிவு செய்கின்றனர்."
என்றும் அவர் கூறினார்.
City Square கடைத்தொகுதியில் உள்ள Golden Village திரையரங்கத்தில் அக்டோபர் 5ஆம் தேதி வரை 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் திரையிடப்படவிருக்கிறது.
சிங்கப்பூரில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை Cathay Cineplexes, Carnival Cinemas, Shaw உள்ளிட்ட பல திரையரங்குகள் திரையிடுகின்றன.
ரசிகர்கள், வார இறுதி நாள்களில் (1, 2 அக்டோபர்) இணையம் வழி நுழைவுச்சீட்டுகளுக்கு மிக அதிகமாக முன்பதிவு செய்திருப்பது, 'செய்தி' ஆராய்ந்ததில் தெரியவந்தது.
தமிழ் இலக்கியத்தின் ஆகப் பிரமாண்டமான நாவல் 'பொன்னியின் செல்வன்'. அது 1950களில் பிரபல எழுத்தாளர் கல்கியால் எழுதப்பட்டது.
அதைத் தழுவி இயக்குநர் மணிரத்னம் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் திரைப்படம் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிடப்படுகிறது.