சிங்கைக் கலைத்துறை முன்னேற்றத்திற்குக் கூடுதல் ஆதரவு - 46 பேருக்குக் கலை மரபுடைமை உபகாரச் சம்பளம்
(படம்: National Arts Council)
This audio is generated by an AI tool.
தேசியக் கலைகள் மன்றமும் தேசிய மரபுடைமைக் கழகமும் இணைந்து இவ்வாண்டு சாதனை அளவாக 46 பேருக்கு உபகாரச் சம்பளம் வழங்கியுள்ளன.
கலைத்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கும் கலை, கலாசாரத்துறையை வடிவமைக்கும் எதிர்காலத் தலைவர்களுக்கும் அவை வழங்கப்பட்டன.
தேசியக் கலைகள் மன்றத்தின் பட்டயப்படிப்பு உபகாரச் சம்பளம் பெற்ற 27 பேர் LASALLE கலைக்கல்லூரி, நன்யாங் நுண்கலைக் கழகம், சிங்கப்பூர்க் கலைப்பள்ளி ஆகியவற்றில் பயில்வர்.
கூடுதலான இளையர்கள், குறிப்பாக வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வரும் இளையர்கள் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் வேலைகளைத் தேடுவதை ஊக்குவிக்க, அதிபர் சவால் நிதிக்கு ஆண்டுக்குக் கூடுதலாக 2.3 மில்லியன் வெள்ளியை வழங்கத் தேசியக் கலைகள் மன்றம் உறுதியளித்தது.
இதுபோன்ற திட்டங்கள் சிங்கப்பூரில் கலையை வளர்க்க உதவுகிறது என்று கூறுகிறார், பட்டப்படிப்பு உபகாரச் சம்பளம் பெற்று, LASALLE கலைக்கல்லூரியில் இசைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளவிருக்கும் புவனேஸ்வரன் கனேசன்.
சிங்கப்பூரில் இசைத்துறையின் செயல்முறைகளை மேம்படுத்தி நமது இசையை உலக அரங்கில் பிரபலமடையச் செய்வதே தமது இலக்காகவுள்ளது என்றார் அவர்.