ராபின்சன் ரோட் புதிய அலுவலகக் கட்டடம் - 93 விழுக்காட்டு இடங்கள் நிறைந்தன
சிங்கப்பூரில் எண் 79, ராபின்சன் ரோட்டில் திறக்கப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடத்தில் 93 விழுக்காட்டு இடங்கள் நிரப்பப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வர்த்தக வட்டாரத்தில் அமைந்துள்ள அந்த அலுவலகக் கட்டடம், இன்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
நேரடியாகவும் இணையம் வழியாகவும் வேலைசெய்யும் தேவைகளைப் பூர்த்தி செய்ய அந்தக் கட்டடத்திலுள்ள அலுவலகங்களால் முடியும்.
இன்னும் கூடுதலான ஊழியர்கள் மீண்டும் வேலையிடத்துக்குத் திரும்பும்போது, நீக்குப்போக்கான வேலையிடங்களுக்கான தேவை 20 விழுக்காடு அதிகரிக்கும் என்று சொத்துச் சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் மத்திய சேமநிதிக் கட்டடம் அமைந்திருந்த இடத்தில், புதிய கட்டடம் அமைந்துள்ளது.
29 மாடிகளைக் கொண்ட அந்தக் கட்டடத்தில் வங்கிச் சேவைகள், தொழில்நுட்பம், விமானத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த 16 பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன.