ஈராண்டுகளில் புதிய உணவு நடுவம்... சிங்கப்பூரில்!
சிங்கப்பூரில் இன்னும் ஈராண்டுகளில் புதிய உணவு நடுவம் ஒன்று தயாராகிவிடும்.
அங்கே நாளொன்றுக்கு 200ஆயிரம் பேர் உட்கொள்ளத் தேவையான உணவைத் தயாரிக்கமுடியும்.
இப்போதுள்ள உற்பத்தி ஆற்றலைவிட அது ஒரு மடங்கு அதிகம்.
இயந்திர மனிதக் கருவியின் துணையோடு செயல்படும் அந்த நவீன நடுவம் சிங்கப்பூரின் உணவு மீள்திறனுக்கான 150 மில்லியன் வெள்ளி முதலீடாக அமையும்.
வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் உணவு நடுவத்தின் நிலந்திருத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
உணவுத் தயாரிப்பு நிறுவனமான SATS அதனை அறிமுகம் செய்துள்ளது.
விமான நிறுவனங்கள், மருத்துவமனைகள், சிங்கப்பூர் ஆயுதப்படை முதலியவற்றுக்கு அது உணவுப் பொட்டலங்களை விநியோகித்து வருகிறது.
புதிய 5 மாடிக் கட்டடத்தில் சமையல்கூடம், புத்தாக்க ஆய்வகம், வருகையாளர்கள் உணவைச் சுவைத்துப் பார்க்கும் இடம் ஆகியவை இருக்கும்.
ஜூரோங் புத்தாக்க வட்டாரத்தில் புதிய உணவு நடுவம் கட்டப்படும்.
சிங்கப்பூர், வளங்களை வீணடிக்காமல் நீடித்து நிலைக்கும் வகையில் உணவை உற்பத்தி செய்வதில் புதிய நடுவம் முக்கியப் பங்காற்றுமெனத் திரு. கான் குறிப்பிட்டார்.
இயற்கைவளம் குறைந்த சிறிய நாடான சிங்கப்பூரில் உணவுப் பாதுகாப்பும் அதன் மீள்திறனும் எப்போதுமே முன்னுரிமை பெறுகின்றன.
பருவநிலை மாற்றம், விநியோகத் தொடர்ச்சியில் உருவாகும் சவால்கள், கிருமிப்பரவல், உக்ரேனியப் போர் ஆகியவற்றால் அது மேலும் முக்கியத்துவம் பெறுவதாகச் சொன்னார் திரு. கான்.