'சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் வெளிக்காட்டிய திறன்கள் பாராட்டுக்குரியவை'
31ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் வெளிக்காட்டிய திறன்கள் பாராட்டுக்குரியவை என்று சிங்கப்பூர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சூ சுன் வெய் (Su Chun Wei) கூறியிருக்கிறார்.
இருப்பினும், நோய்ப்பரவல் சூழல், வட்டார நாடுகளைச் சேர்ந்த அனைத்து விளையாட்டாளர்களின் செயல்திறனிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் கூறினர்.
சிங்கப்பூர் 47 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.
நீச்சல் போட்டிகளில் சிங்கப்பூர் 21 தங்கங்களை வென்று தொடர்ந்து 9ஆவது முறையாக முன்னணி வகித்தது.
21 வயது குவா ஜிங் வென் (Quah Jing Wen) 6 தங்கங்களை வென்றார்.
உருட்டுப் பந்துப் போட்டியின் பெண்கள் ஒற்றையர், இரட்டையர், குழுப் பிரிவுகளில் செரி டான் Cherie Tan) தங்கம் வென்றார்.
சிலாட் போட்டிகளில் 4 தங்கங்களையும், வாட்போர் போட்டிகளில் 6 தங்கங்களையும் சிங்கப்பூர் வென்றது.
ஓட்டப் பந்தயத்திலும் சிங்கப்பூர் ஒரு தங்கத்தைக் கைப்பற்றியது.
முன்னைய 3 விளையாட்டுப் போட்டிகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூர் வென்றுள்ள தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை முதல்முறையாக 50ஐத் தாண்டவில்லை.
இருப்பினும் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்திருப்பதாகச் சிங்கப்பூர் விளையாட்டுச் சங்க அதிகாரிகள் கூறினர்.
ஹனோயில் 17 நாள்கள் நடைபெற்ற 33 விதமான விளையாட்டுகளில் சிங்கப்பூரின் 424 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இனி அடுத்த ஆண்டு கம்போடியாவில் நடைபெறவிருக்கும் விளையாட்டுகளுக்குத் தயாராவதில் சிங்கப்பூர் அணி கவனம் செலுத்தும்.