வெளிநாட்டு ஊழியர்களே கடப்பிதழ் வைத்திருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை
(கோப்புப் படம்: AFP)
This audio is generated by an AI tool.
வெளிநாட்டு ஊழியர்களிடமே தங்களின் கடப்பிதழ் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
2024இல் மனிதவள அமைச்சு நடத்திய கருத்தாய்வு ஒன்றில் வேலை அனுமதியில் உள்ள 31 விழுக்காட்டினர் தங்களுடைய கடப்பிதழ்களை வைத்திருப்பதில்லை என்று தெரியவந்தது.
ஊழியர்களின் உரிமைகளை வலியுறுத்தப் பல்வேறு தளங்கள் பயன்படுத்தப்படுவதாக டாக்டர் டான் சொன்னார்.
கடப்பிதழ்களை வைத்திருக்கும் முதலாளிகளுக்கு எதிராகப் புகார் அளிக்கும்படியும் அவர்கள் ஊக்குவிக்கப்படுவதாக அவர் கூறினார்.
ஊழியர்களின் கடப்பிதழ்களை வைத்திருக்க அனுமதியில்லை என்று நிறுவனங்களுக்கும் அவ்வப்போது அறிவுறுத்தப்படுவதாக டாக்டர் டான் சொன்னார்.
நிறுவனங்கள் ஊழியர்களின் கடப்பிதழை வைத்திருப்பது தெரியவரும்போது மனிதவள அமைச்சு விசாரிப்பதுண்டு.
பெரும்பாலான சூழல்களில் கடப்பிதழ்கள் ஊழியர்களிடம் திரும்பக் கொடுக்கப்படுகின்றன.
அவ்வாறு செய்யத் தவறும் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக டாக்டர் டான் சொன்னார்.
சில நேரங்களில் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்குச் சேர்க்கத் தடைசெய்யப்படலாம் என்றும் அவர் கூறினார்.