சாலையில் வன்முறைச் சம்பவங்கள் குறைந்துள்ளன
CNA
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு சாலையில் வாகனங்கள் தொடர்பாகப் பதிவான வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை 36 என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
2019ஆம் ஆண்டில் அத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை 48 ஆக இருந்தது.
கிருமிப்பரவல் சூழலில் சாலைகளில் குறைந்த வாகனங்கள் செல்வது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.
2019ஆம் ஆண்டில் 21 சாலை வன்முறைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகக் காவல்துறை நடவடிக்கை எடுத்தது. சென்ற ஆண்டு அது, 11 சாலை வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டது.
அத்தகையோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, பிறரைச் சாலைகளில் வன்முறையான வழியில் நடந்துகொள்வதைத் தவிர்க்கச் செய்துள்ளதாக நம்பப்படுகிறது.
ஆபத்தான முறையில் வாகனமோட்டுவோருக்கு
5,000 வெள்ளி வரை அபராதமோ, ஓராண்டு வரை சிறைத் தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.