சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
'கட்டாயம் என்றால்தான் போடுவேன்' - கூடுதல் Booster தடுப்பூசி போடத் தயங்கும் பலர்
கிருமிப்பரவல் தொடங்கியபோது COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டது.
முதலாம் தடுப்பூசி... பின்னர் இரண்டாம் தடுப்பூசி...சிங்கப்பூரில் 92 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்..
முதல் மூன்று தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால் மட்டுமே தடுப்பூசித் தகுதியை நிலைநாட்ட முடியும் என்ற நிலை பின்னர் ஏற்பட்டது.
சிங்கப்பூரில் 82 விழுக்காட்டினர் அவற்றைப் போட்டுக்கொண்டனர்.
தற்போது இருவகைத் திறன்கொண்ட தடுப்பூசியை booster தடுப்பூசியாகப் போட்டுக்கொள்ள 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்வதும் கட்டாயமாக்கப்படவில்லை...
கூடுதல் booster தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குப் பலர் தயங்குகின்றனர்.
போட விரும்பாதோர் கூறும் காரணங்கள்
"தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம்.... அதைப் போடாவிட்டால் பயணம் செய்யமுடியாது. இதுபோன்ற சூழல் வந்தால் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்வேன்"
"தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் இப்போது கட்டாயமில்லையே. போடாவிட்டாலும் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை,"
"தடுப்பூசி போட்டுக்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ள விரும்பவில்லை..இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப விரும்புகிறேன்"
"கிருமித்தொற்றுக்கு ஆளாகிவிட்டேன், தடுப்பூசியும் போட்டுக்கொண்டேன்.. ஓரளவு தடுப்பாற்றல் உள்ளதே...ஏன் இன்னொரு தடுப்பூசி?'
"விருப்பம் உள்ளவர்கள் முகக்கவசம் போடட்டும்...விருப்பமுள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளட்டும்...நான் COVID-19 இல்லாததைப் போன்று வாழப் போகிறேன்,"
"தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கிருமித்தொற்று ஏற்படுகிறதே...எதற்குக் கூடுதல் தடுப்பூசி?"
போட்டுக்கொள்வோர் சொல்லும் காரணங்கள்
"பயணம் செய்வதற்குக் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பது ஒரு தகுதியாக விரைவில் மாறலாம். அதனால் நான் போட்டுக்கொள்ள விரும்புகிறேன்"
"புதிய ரகக் கிருமி தோன்றினால் பாதுகாப்பு அவசியம். அதனால் தடுப்பூசியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போட்டுக்கொள்வதே சிறந்தது."
கூடுதல் Booster தடுப்பூசி அவசியமா? இல்லையா?
அதற்குப் பதிலளித்தார் டாக்டர் துளசி சந்திரன்.
கிருமித்தொற்று ஏற்படுவதை உறுதியாகத் தடுக்கமுடியாது...ஆனால் அதற்கு எதிரான பாதுகாப்பு பெறுவதற்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கியம்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் மரணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைகிறது.
கொரோனா கிருமி உருமாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கிறது. அதற்கு எதிரான தடுப்பாற்றலைப் பெற புதிய தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதும் அவசியம். ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும் உடலின் தடுப்பாற்றல் நாளடைவில் குறையும் என்று டாக்டர் துளசி கூறினார்.
கிருமிப்பரவல் நிரந்தர நோயாகக் கருதப்படும் நிலையில் நோய்க்கு எதிரான பாதுகாப்பைப் பெற்றிருப்பது அவசியம்.
சளிக்காய்ச்சலுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வதைப் போல COVID-19 நோய்க்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமே!