சிங்கப்பெண்ணே!: சவால்களில் தான் வாய்ப்பு உள்ளது- ஒவ்வோர் இடரையும் கடந்து சென்ற சிங்கப்பூரர் #CelebratingSGWomen
வாழ்க்கையில் முன்னேறிச் செல்லும் போது எதிர்கொள்ளும் சில சிரமங்களைப் பற்றி கவலைப்படாமல், வாய்ப்புகள் என்னென்ன என்று யோசித்து வெற்றிபெற வேண்டும் என்கிறார் திருமதி மேனகா.
வாழ்க்கையில் முன்னேறிச் செல்லும் போது எதிர்கொள்ளும் சில சிரமங்களைப் பற்றி கவலைப்படாமல், வாய்ப்புகள் என்னென்ன என்று யோசித்து வெற்றிபெற வேண்டும் என்கிறார் திருமதி மேனகா.
"முயற்சியை எப்போதும் கைவிடக்கூடாது" - சிறு வயதில் ஏற்பட்ட நம்பிக்கை, பல நேரங்களில் வாழ்க்கையில் உதவியது.
இந்தச் சிங்கப்பெண்ணின் கதையைக் கேட்போமா?
சாதாரண குடும்பத்தில் பிறந்து சிங்கப்பூரில் சிறந்த முக ஒப்பனையார்களில் ஒருவராக
முன்னேறிய 59 வயது மேனகாவின் வெற்றிக் கதை 'செய்தி' ரசிகர்களுக்காக....
ஒப்பனை மீது ஆர்வம்:
1962 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தார் மேனகா.
சிறு வயதில் இருந்தே ஒப்பனைகளில் ஆர்வம்.
தந்தை ஆங்கில ஆசிரியர் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்தச் சொல்வார்.
மேனகா, வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளின் போது, மற்றவர்களுக்கு ஒப்பனை செய்து அழகு பார்ப்பார், அவர்களிடமிருந்து பாராட்டுகளையும் பெறுவார்.
எதிர்பாராத் திருப்பங்கள்:
மேனகாவிற்கு 17 வயது. அவரது தந்தை மாரடைப்பால் காலமானார்.
3 தங்கைகள், பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம்.
இருப்பினும் ஒப்பனை மீது ஆர்வம் குறையவில்லை. ஏதேனும் செய்து சாதிக்க வேண்டும் என்று மனம் துடித்தது. 24 வயதில் திருமணம்.
புதிய வாய்ப்பு:
1980 களில் சிங்கப்பூரில் இந்தியர்களுக்கென ஒப்பனைக் கலைஞர்கள் யாரும் அவ்வளவாக இல்லை.
வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தார்.
உறவினர்கள் யாரேனும் திருமணத்துக்கு அழைக்க வந்தால் மணப்பெண்ணுக்கு ஒப்பனை செய்ய வாய்ப்புக் கேட்பார்.
மேனகாவின் ஒப்பனைக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க, பலர் அவரை அணுகத் தொடங்கினர்.
புதிய சவால்கள்:
முதலில் வீட்டில் ஒப்பனைச் சேவை வழங்கிய மேனகா, வாடிக்கையாளர்கள் அதிகரிக்க, 1991ஆம் ஆண்டு கடை ஒன்றை வாடகைக்கு எடுத்தார்.
1993ஆம் ஆண்டுகளில் ஒப்பனைக்கான மோகம் அதிகரித்தது. கூடவே தொழிலில் போட்டியும் அதிகரித்தது.
புருவத்தைச் சீராக்குவதில் பலர் கைதேர்ந்து விளங்கினர்.
ஆனால் மேனகாவிற்கு அந்தத் திறன் இல்லை. வாடிக்கையாளர்களை இழந்தார். மனம் வாடியது.
தொழிலில் நிலைத்திருக்க ஒரே வழி, திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது சிறுவயதிலிருந்து கண்ட கனவை மூட்டை கட்டவேண்டும்......முடிவெடுத்தார்; இந்தியா சென்றார்; புதிய ஒப்பனை முறைகளைக் கற்றுகொண்டார்.
6 மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் வந்தார்; மீண்டும் முழுவேகத்தில் வேலையைத் தொடங்கினார்.
மாதம் 20 மணப்பெண்களுக்கு ஒப்பனை செய்யும் அளவுக்கு வரவேற்பு.
கடையும் பிரபலமாக எண்ணிப்பாராத அளவில் வெற்றி.
மீண்டும் சவால்..
அடுத்த 10 ஆண்டுகள் வேகமாகத் தொழிலை வளர்த்தார்.
சிங்கப்பூரில் நூற்றுக்கணக்கான ஒப்பனை கடைகள் திறக்கப்பட்டதால் போட்டி அதிகரித்தது.
வாடிக்கையாளர்களை ஈர்க்க மீண்டும் புதிய திறன்களும் உத்திகளும் தேவைப்பட்டன.
இளையர்களின் வேகத்திற்கு மேனகாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இருப்பினும், கற்றுக்கொள்ளத் தயங்கவில்லை.
இப்போது:
ஒப்பனையில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பாடங்கள் எடுத்து வருகிறார்.
நோய்ப்பரவலால் தொழில் பாதிக்கப்பட்டாலும் நம்பிக்கையுடன் கடை நடத்தி வருகிறார்.
சவால்கள் இல்லாவிட்டால் நமது பலம் நமக்குத் தெரியாமல் போய்விடும்; சவால்களை வரமாக எண்ணி வேலை செய்ய வேண்டும்; அது நிச்சயம் வெற்றி தரும்.
இது இந்த சிங்கப்பெண்ணின் வெற்றி மந்திரம்!