SQ321 விமானச் சம்பவம்: பயணிகளுக்கு SIA இழப்பீடு வழங்குவது கட்டாயமா?
(படங்கள்: Reuters/Handout, Stringer)
SQ321 விமானச் சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (SIA) பாதிக்கப்பட்ட 211 பயணிகளுக்கும் இழப்பீடு தருவதாக அறிவித்தது.
அந்த விமானம் லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்தது.
சென்ற மாதம் (மே) 21ஆம் தேதி விமானம் நடுவானில் கடுமையாக ஆட்டங்கண்டதால் பேங்காக்கில் அது அவசரமாகத் தரையிறங்கியது.
சம்பவத்தில் ஒருவர் மாண்டார். பலர் காயமுற்றனர்.
இலேசாகக் காயமுற்றவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் (13,500 வெள்ளி) வழங்கப்படும்.
கடுமையான காயங்கள் மருத்துவப் பரிசோதனை வழி உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள், நீண்டகால மருத்துவக் கவனிப்பும் பண உதவியும் தேவைப்படும் பயணிகள் ஆகியோருக்கு முன்பணமாக US$25,000 (33,800 வெள்ளி) கொடுக்கப்படும்.
அந்தச் சம்பவம் குறித்து CNA செய்தித்தளம் விமானத்துறை வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசியது.
SIA இழப்பீடு வழங்குவது கட்டாயமா?
இல்லை.. விபத்து நடந்து உடனடியாக அதனைச் செய்யத் தேவையில்லை.
அதுவும் முழு விசாரணையின் முடிவுகள் இன்னும் வெளியாகாத அடிப்படையில் இழப்பீட்டை வழங்கவேண்டிய கட்டாயம் இல்லை என்று நிபுணர்கள் கூறினர்.
சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 3 வாரம் ஆகிவிட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை விரைவில் வழங்குவது வாடிக்கையாளர்களைக் கவனித்துக்கொள்ளும் நடவடிக்கையை SIA சரியாக எடுப்பதைக் காட்டுவதாக நிபுணர் ஒருவர் குறிப்பிட்டார்.
பயணிகள் கோரிக்கை விடுக்கும்வரை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் விமான நிறுவனங்களால் இருக்க முடியும் என்றார் அவர்.
✈️பயணிகளின் தெரிவுகள் என்னென்ன?
இழப்பீட்டை வாங்குவதற்கு முன் சட்டத் தெரிவுகளை ஆராயும்படி பயணிகளிடம் ஆலோசனை கூறியுள்ளனர் வழக்கறிஞர்கள் சிலர்.
விமான நிறுவனங்களும் அவற்றின் காப்புறுதி நிறுவனங்களும் சட்ட நடைமுறைகளுக்குத் தீர்வுகாண முயற்சி செய்யும் என்று விமானத்துறை வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டார்.
குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகையைத் தீர்மானிக்க அது முக்கியம் என்றார் அவர்.
கடுமையாகக் காயமடைந்த பயணிகள் விமானத்துறை வழக்கறிஞர்களிடம் பேசி மருத்துவ அறிக்கைகளைப் பெறுவது முக்கியம்.
அப்போதுதான் விபத்து எவ்வளவு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மதிப்பிட முடியும்.
பயணிகளின் கோரிக்கை முழுமையாகப் பரிசீலனை செய்யப்படுவதை வழக்கறிஞர்களும் உறுதிசெய்யலாம்.