சிங்கப்பூர் exclusive
“சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விமானத்துறை நடுவமாக சிங்கப்பூர் முதல் அடி எடுத்து வைத்துள்ளது”
AFP
விமானத்துறையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் சிங்கப்பூர் முதல் அடி எடுத்து வைத்திருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
"அதற்கு சிங்கப்பூர் அளிக்கும் முக்கியத்துவம் இவ்வாண்டின் விமானக் கண்காட்சியில் தெரிகிறது,"
என்று விமானத் துறை நிபுணர் பிரிவீன் ராஜ் நாயுடு 'செய்தி'யிடம் கூறினார்.
ஆசியாவின் ஆகப் பெரிய விண்வெளி, தற்காப்புத் துறை நிகழ்ச்சியாகக் கருதப்படும் சிங்கப்பூர் விமானக் கண்காட்சி (Singapore Airshow) நேற்று முன்தினம் (20 பிப்ரவரி) தொடங்கியது.
இவ்வாண்டு 50க்கும் அதிகமான நாடுகளும் 1,000 நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் விமானத்துறையை மேம்படுத்தும் வழிகள் இவ்வாண்டு கண்காட்சியில் முக்கிய இடம்பிடிக்கின்றன.
கண்காட்சியின் சில முக்கிய அம்சங்கள்
-- சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விமானத்துறை நடுவமாக சிங்கப்பூரை மாற்ற வரைபடம் வெளியிடப்பட்டது.
--விமானச் சேவைகள், விமான நிலையம், விமானப் போக்குவரத்து நிர்வாகம் ஆகியவற்றில் குறைவான எரிசக்தி அல்லது பசுமை எரிசக்தியைப் பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- Airbus நிறுவனம் SAF எரிபொருளில் இயங்கும் A350-1000 ரக விமானத்தைக் காட்சிக்கு வைத்துள்ளது.
- சிங்கப்பூரில் Airbus Sustainable Aviation Hub எனும் ஆய்வு நிலையத்தை உருவாக்கப் பொருளியல் வளர்ச்சிக் கழகத்துடன் Airbus இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது.
"மாற்றம் தேவை"
சுற்றுசூழலுக்கு ஏற்ற நடவடிக்கைகளுக்கு மாற முக்கியமாக 2 அம்சங்களில் மாற்றம் தேவை என்று திரு பிரிவீன் சொன்னார் - மென்பொருள் (Software), வன்பொருள் (Hardware).
மென்பொருள்
"விமானங்களில் செயல்முறையை மாற்றலாம். அது கொஞ்சம் எளிது. அதையே சிங்கப்பூர் செய்துள்ளது."
வன்பொருள்
"விமானங்களையே சுற்றுச்சூழலுக்கு ஏற்றவையாக மாற்றுவது."
உதாரணத்துக்குக் குறைவான எரிபொருளிலும் விமானம் சிறப்பாகச் செயல்படும் வகையில் அதை உருமாற்றுவது எப்படி என்பதை ஆராயலாம். அதற்கு நீண்டகால முயற்சி அவசியம்
"இவை மட்டும் போதாது"
“முழுக் கட்டமைப்பிலும் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். விமான உற்பத்தியிலிருந்து உணவுத் தயாரிப்பு வரை அனைத்து அம்சங்களிலும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு முயற்சி எடுக்கவேண்டும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விமானத்துறை நடுவமாக மாற சிங்கப்பூர் வெளியிட்ட வரைபடம் அதை கோடிகாட்டுகிறது,” என்றார் திரு பிரிவீன்.
"பயணத்துறை வளர்ச்சிக்கு இடையே சிங்கப்பூர் எடுத்துவைத்துள்ள முதல் அடி"
பயணத்துறை இவ்வாண்டு கிருமிப்பரவலுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணத்துறை வளர்ச்சியில் பாதி ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
“இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா போன்ற நாடுகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விமானத்துறை நடவடிக்கைகளைப் பரிசீலிக்கின்றன. விமானத்துறை நடுவமான சிங்கப்பூர் இந்த முயற்சியை வழிநடத்தவும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றவும் முதல் அடி எடுத்து வைத்துள்ளது,” என்றார் திரு பிரிவீன்.