சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
சிங்கப்பூரில் கூடிய விரைவில் Evusheld மருந்து
கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க உலக அளவில் பல வகையான தடுப்புமருந்துகள் புழக்கத்தில் உள்ளன.
இந்நிலையில், கோவிட்-19 நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கு Evusheld என்னும் மருந்தைத் தயாரித்துள்ளது AstraZeneca மருந்தாக்க நிறுவனம்.
அது தொடர்பான உடன்பாட்டில், சிங்கப்பூரும் AstraZeneca நிறுவனமும் சென்ற மாதம் கையெழுத்திட்டன.
ஒருவருக்கு நோய் தொற்றியபின்னர், அதனால் ஏற்படக்கூடிய கடுமையான பக்கவிளைவுகளைக் குறைக்க Evusheld மருந்து உதவும்.
கிருமித்தொற்று நேர்ந்த மூன்று நாட்களுக்குள் Evusheld மருந்தை எடுத்துக்கொண்டால், கடுமையாக நோய்வாய்ப்படுவது, மரணம் நேர்வது ஆகிய அபாயங்களை 90 விழுக்காடுவரை குறைக்கலாம் என்கிறார் AstraZeneca நிறுவனத்தின் சிங்கப்பூர்த் தலைவர் திரு. வினோத் நாராயணன்.
Tixagevimab, Cilgavimab ஆகிய இரண்டு விதமான நோய் எதிர்ப்புப் புரதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது Evusheld மருந்து.
இவ்விரு புரதங்கள் இருப்பதால், மற்ற கொரோனா கிருமி வகைகளை எதிர்க்கும் ஆற்றலும் Evusheld மருந்துக்கு இருப்பதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகத் திரு. வினோத் கூறினார்.
ஒரு முறை மட்டுமே தசை வழியாகச் செலுத்தப்படும் இந்த மருந்து, ஓராண்டுவரை பாதுகாப்பு வழங்கும்.
புற்று நோயாளிகள், ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை தேவைப்படுவோர், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டோர்- ஆகியோரின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அவர்களுக்கு Evusheld மருந்து பொருந்தும் என்றார் திரு. வினோத்.
Evusheld மருந்துகளின் முதல் தொகுதி சிங்கப்பூருக்கு வந்துசேர்ந்துள்ளன.
தேவைப்படும் நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்க சுகாதார அமைச்சுடன் இணைந்து செயல்படுகிறது AstraZeneca நிறுவனம்.