சீனாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த சிங்கப்பூர்த் தலைவர்கள் விருப்பம்
Yue Yuewei/Xinhua via AP
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர்த் தலைவர்கள் சீனாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த விரும்புகின்றனர்.
இருநாட்டு அரசதந்திர உறவின் 35 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சீனாவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்திகளில் சிங்கப்பூர்த் தலைவர்கள் அதனைக் குறிப்பிட்டனர்.
முன்னோடித் தலைவர்களின் முயற்சியால் இருநாடுகளின் நெருக்கமான பங்காளித்துவம் விளங்குவதாக அதிபர் தர்மன் சண்முகரத்தினம் சொன்னார்.
மின்னிலக்கம், பசுமைப் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு முதலிய துறைகளில் ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
ஒரு நாடு மற்றொன்றின் கண்ணோட்டத்தைப் புரிந்து கொள்ள விரும்பும் எண்ணத்தில் இருநாடுகளின் ஒத்துழைப்பு வளர்ந்துள்ளதாக பிரதமர் லாரன்ஸ் வோங் சொன்னார்.
வட்டார வளர்ச்சிக்கான புதிய வழிகளை இரு நாடுகளும் ஆராயலாம் என்றும், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை இணைந்து சமாளிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
பல்லாண்டாய்த் தொடரும் இருதரப்பு நட்பையும், புரிந்துணர்வையும் துணைப்பிரதமர் கான் கிம் யோங் (Gan Kim Yong) மெச்சினார்.
அரசாங்கங்களுக்கு இடையிலான மூன்று திட்டங்களிலும், வழக்கமான பரிமாற்றங்களிலும் இருதரப்பு ஒத்துழைப்பு உறுதுணையாய் இருப்பதை அவர் சுட்டினார்.
இருதரப்பு அரசதந்திர உறவின் ஆண்டு நிறைவையொட்டி வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (Vivian Balakrishnan) சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீக்குக் (Wang Yi) கடிதம் எழுதியிருக்கிறார்.
தடையற்ற வர்த்தகம், பன்முகத்தன்மை, விதிகள் அடிப்படையிலான உலக ஒழுங்கு ஆகியவற்றுக்கு இரு நாடுகளும் பக்கபலமாய் இருப்பதை அவர் சுட்டினார்.
மக்களுக்கு மட்டுமல்ல பரந்த அளவில் வட்டாரமும் பயன்பெற சிங்கப்பூரும் சீனாவும் இன்னும் அதிகம் செய்ய முடியும் என்று டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.