COVID-19 நோய்த்தொற்று - சிங்கப்பூர் ஓரளவுக்குச் சீரான நிலையில் உள்ளது: அமைச்சர் ஓங்
சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், COVID-19 நோய்த்தொற்றைப் பொறுத்தவரை சிங்கப்பூர் ஓரளவுக்குச் சீரான நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இங்கு நடைபெறும் உலகச் சுகாதாரப் பாதுகாப்பு மாநாட்டில் அவர் பேசினார்.
பெரும்பாலான சமூகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதையும் எல்லைகள் திறக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டினார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளவர்கள் பயணம் செய்யத் தடையில்லை.
பலரும் இயல்பான வாழ்க்கையைத் தொடர்வதாக அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
எனினும் நேற்றுக் (ஜூன் 28) கூடுதல் COVID-19 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.
நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வந்து விடவில்லை.
அதனால் தொடர்ந்து விழிப்பாக இருப்பது அவசியம் என்று திரு. ஓங் வலியுறுத்தினார்.
புதிய கிருமி ரகங்களால் மீண்டும் கிருமிப்பரவல் ஏற்படும் சாத்தியமுள்ளது.
ஏற்கனவே சமூகத்தில் புதிய சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
உலக அளவிலும் புதிய கிருமி ரகங்களால் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
வருங்காலச் சவால்களைச் சமாளிக்கத் தயாராய் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கூறினார்.