சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"சிங்கப்பூரின் அடிப்படை மிக வலுவானது. சிறிய மாற்றங்கள் ஏற்பட்டாலும், அதிலிருந்து நம்மால் மீள முடியும்" – நிதி நிபுணர்
நிருபர்: சாய் சஞ்சுரா நாயர்
சிங்கப்பூரில் அடிப்படை பணவீக்கம், 14 ஆண்டுகள் காணாத அளவை நெருங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 5.1 விழுக்காடாக அது பதிவானது. ஜூலை மாதத்தில் பதிவான 4.8 விழுக்காட்டிலிருந்து அது 0.3 விழுக்காடு அதிகம்.
அதனையடுத்து, சில நிதி அமைப்புகள் நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் நிலையான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளன.
ஆனால் சிங்கப்பூரர்கள் இதை எண்ணி அஞ்சவேண்டாம் என்று கூறுகிறார் நிதி நிபுணர் முத்தையா சுந்தரம்.
“அமெரிக்கப் பங்குச் சந்தையில் நிகழும் அனைத்துமே உலக நாடுகளை அனைத்துலக அளவில் பாதிக்கும். சிங்கப்பூர் சிறிய நாடென்பதால் அதற்குக் கண்டிப்பாகப் பாதிப்பு உண்டு. ஆனால் சிங்கப்பூரின் அடிப்படை மிக வலுவானது. அதனால், சிறிய மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதிலிருந்து நம்மால் மீண்டுவர முடியும்”
என்றார் அவர்.
இருந்தாலும் பொருளியல் மந்தநிலை ஏற்பட்டால் ஊழியர்கள் வேலை இழக்க நேரிடலாம்.
மேலும் நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்யக்கூடும் என்று கூறினார் திரு. முத்தையா.
வட்டி விகிதமும் பணவீக்கமும் அதிகரித்துச் சம்பளம் ஒரே நிலையில் இருக்கும்போது, மக்களிடையே பொருள்கள் வாங்கும் திறன் குறைகிறது.
அதனால், பொருள்களின் உற்பத்தியும் குறைந்து, உற்பத்தித் திறன் பாதிப்படைகிறது. நிறுவனங்களின் வருமானம் குறைவதால், அவை ஆட்குறைப்புச் செய்துவருகின்றன.
இருப்பினும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வட்டி விகிதத்தை அதிகரிப்பது சரியான முடிவு என்றும் பொருளியல் சமநிலைக்குத் திரும்பி மீண்டும் மேம்பட அது உதவும் என்றும் பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.