ஆப்கன் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் $50,000 நிதியுதவி
ஆப்கானிஸ்தானின் பாக்திக்கா (Paktika) மாநிலத்தில் நேற்று (ஜூன் 22) நேர்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்க 50,000 வெள்ளி நிதியுதவி வழங்கப்போவதாகச் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த நிலநடுக்கத்தில் 1,000க்கும் அதிகமானோர் மாண்டனர்.
மாண்டோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகச் சங்கம் கூறியது.
உணவு, அவசரகாலக் கூடாரங்கள், தண்ணீர், சுகாதாரப் பொருள்கள் ஆகிய உடனடி தேவைகளைக் கையாள அந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அது குறிப்பிட்டது.
மீட்புச் செயல்பாடுகளுக்கு உதவ பொது நிதித்திரட்டு ஒன்றையும் சங்கம் தொடங்கவுள்ளது.
"உயிர்பிழைத்தவர்களுக்கு உடனடியாக சுத்தமான தண்ணீர், உணவு, அடைக்கலம் ஆகியவை தேவைப்படுகிறது."
என்று சங்கத் தலைவர் திரு. பெஞ்சமின் வில்லியம் (Benjamin William) தெரிவித்தார்.
ஆதரவுக்கரம் நீட்டுமாறு அவர் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.