சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்
சிங்கப்பூரில் இன்று SPED எனும் சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.
சிங்கப்பூரில் இன்று SPED எனும் சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.
சுகாதார மேம்பாட்டு வாரியம் அதற்கான நடமாடும் தடுப்பூசிக் குழுக்களைப் பள்ளிகளுக்கு நேரடியாக அனுப்பும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
சிறப்புத் தேவையுடைய மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாறுபட்ட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
காத்தோங் (Katong) பள்ளி, லைட்ஹவுஸ் (Lighthouse) பள்ளி, லீ கொங் சியன் கார்டன்ஸ் (Lee Kong Chian Gardens) பள்ளி, டவ்னர் கார்டன்ஸ் (Towner Gardens) பள்ளி ஆகியவற்றில் முதலில் தடுப்பூசித் திட்டம் தொடங்குகிறது.
6இலிருந்து 11 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்வர் என அமைச்சு தெரிவித்தது.
20 SPED பள்ளிகளுக்கும் கட்டங்கட்டமாக நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் அனுப்பிவைக்கப்படும்.
நேற்றைய நிலவரப்படி தடுப்பூசி போட்டுக்கொள்ள சுமார் 3,900 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அவர்களில் 60 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் பதிந்துகொண்டுள்ளனர்.
சிறப்புத் தேவையுடைய மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னதாகக் கல்வி அமைச்சும், சுகாதார அமைச்சும் இணைந்து பெற்றோருக்கான பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
கடந்த மாதம் 29ஆம் தேதியும் இம்மாதம் 6 தேதியும் நடைபெற்ற அந்தப் பயிலரங்குகள் பெற்றோரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வகைசெய்ததாகக் கல்வியமைச்சு தெரிவித்தது.