20 வெள்ளியைத் திருடி 2 சிறுவர்களை வேண்டுமென்றே காயப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நால்வர் கைது
திருட்டுச் சம்பவத்தில் இருவரை வேண்டுமென்றே காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 4 ஆடவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் நால்வரும் 18 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
நேற்றிரவு (4 ஆகஸ்ட்) 9.20 மணியளவில் அராப் ஸ்ட்ரீட்டின் பிற்பகுதியில் இருக்கும் பாதையில் வன்முறைத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகக் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணைமூலம் சம்பவத்தில் நால்வர் ஈடுபட்டது தெரியவந்தது. அதில் பாதிக்கப்பட்ட இருவர் 14 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள்.
அவர்கள் இருவரும் வன்முறையாகத் தாக்கப்பட்டனர். பயத்தில் இருந்த அவர்கள் 20 வெள்ளி ரொக்கத்தையும் ஆளுக்கு ஒரு கைத்தொலைபேசியையும் தாக்கியவர்களிடம் கொடுத்ததாக நம்பப்படுகிறது.
இரு சிறுவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
கண்காணிப்புக் கேமரா, விசாரணை ஆகியவற்றின்மூலம் மத்தியக் காவல்துறைப் பிரிவு சந்தேக நபர்களின் அடையாளத்தைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்தது.
அவர்கள்மீது நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5இலிருந்து 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.