சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை..." - கிருமிப்பரவல் சூழலில் தொழில் மாற்றியவர்கள் சொல்வது
2020ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ஏற்பட்ட COVID-19 பரவல் பலரின் வருமானத்தை மிரட்டியது. சிலர் ஏற்கனவே செய்துகொண்டிருந்த தொழிலை மாற்றியமைக்க வேண்டிய நிலை நிலவியது.
வருமானத்தைக் கட்டிக்காக்கத் தொழில் மாற்றிய சிலரிடம் பேசியது 'செய்தி'.
கிருமிப்பரவலுக்கு முந்திய காலக்கட்டத்தில் பவித்திரா விமானச் சிப்பந்தியாகப் பணியாற்றினார்.
கிருமிப்பரவலால் விமானப் பயணங்கள் வெகுவாகக் குறைந்தன, வருமானத்தை ஈடுகட்ட வேண்டியதால் புதிய வேலை தேடினேன்
என்றார் அவர்.
புதிய வேலையில் சேர்வதற்குத் தயாராக இல்லாவிட்டாலும் சூழ்நிலை அவ்வாறு இருந்தது
ஆனால் புதிய வேலையில் சேர்ந்ததிலிருந்து நான் சிறந்த அனுபவங்கள் சிலவற்றைப் பெற்றேன்
மக்கள் கழகத்தில் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாகச் சேர்ந்த பவித்திரா, தற்காலிகமாகவே அதில் ஈடுபடத் திட்டமிட்டார்.
அதே வேளையில் அவர் கலைப்பொருள்களைத் தயாரித்து அவற்றை விற்றுப் பணம் சம்பாதித்தார்.
தற்போதோ அவர், விமானச் சிப்பந்தியாக வேலை செய்ததற்கு முன்னர் இருந்த தொழிலுக்கே திரும்பிவிட்டார் - ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
இருப்பினும், விமானச் சிப்பந்தியாக மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன்
என்றார் பவித்திரா.
பழைய வேலையில் தொடர்ந்து இருந்திருந்தால் வருமானத்தைக் கட்டிக்காத்திருக்கமுடியாது
என்கிறார் 60 வயதாகும் திரு மனோகரன் முத்துவீரப்பன்.
கிருமிப்பரவல் சூழலுக்கு முன் அவர் நிகழ்ச்சிகளுக்கான மேலாளராகப் (events manager) பணியாற்றினார். கிருமிப்பரவல் சூழலில் நிகழ்ச்சிகள் இடம்பெறாததால் அவருக்கு அந்த வேலையிலிருந்து கிடைத்த வருமானம் குறைந்தது.
புதிய வேலையில் இறங்கத் துணிந்தேன்.
என்று கூறிய அவர், அவரது வேலையிடத்தின் இணைய விளம்பரப் பிரிவின் மேலாளராகப் (Digital Marketing Manager) பணியாற்றுகிறார். ஆனால் அதை நோக்கிய அவரது பாதையில் சில சவால்கள் இருந்தன.
சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் வேலை மாற்றத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட Digital Advertising Professionals என்ற பயிற்சி வகுப்பில் சேர்ந்தார் திரு மனோ.
என் வகுப்பில் பலரும் என்னைவிட இளையவர்கள். அவர்களிடமிருந்து மின்னிலக்கச் செயல்பாடுகளைப் பற்றி மேலும் கற்றுக்கொண்டேன்
என்றார் திரு மனோ.
வாய்ப்பு என்பது அனைவருக்கும் இருக்கக்கூடியது தான்... பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை! மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தேவையானவற்றைச் செய்தால் வாழ்க்கை மேன்மை அடையும்
என்று கூறும் திரு மனோ, அவரது வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்றுக்கொண்டதால் புதிய வேலையில் ஈடுகொடுத்து சரிவரப் பணியாற்ற முடிந்ததை விளக்கினார்.
அவர் புதிய வேலையில் நீடிக்க விரும்புவதாகவும் சொன்னார்.