174கி.மீ. வேகத்தில் வாகனம் ஓட்டிய 17 வயது இளையர் - நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
படம்: SPF
பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களைப் புரிந்ததாக 17 வயது இளையர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
உரிமமின்றி வாகனம் ஓட்டியது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிக் காயம் ஏற்படுத்தியது ஆகியவை அவற்றில் அடங்கும்.
ஜனவரி 2025 முதல் ஜனவரி 2026 வரை நடந்த மூன்று சம்பவங்களுடன் இளையருக்குத் தொடர்புள்ளதாகக் காவல்துறை சொன்னது.
அவற்றில் ஒன்று, ஜனவரி 16 இரவு 10.50 மணிக்கு பயா லேபாரிலிருந்து (Paya Lebar) மரீன் பரேட் (Marine Parade) வரை காவல்துறை இளையரைத் துரத்திய சம்பவம். இதன் காணொளி இணையத்தில் பரவிவருகிறது.
அந்த இளையர் மணிக்கு 174 கிலோமீட்டர் வேகத்தில் வாகனம் ஓட்டியது விசாரணையில் தெரியவந்தது.
சிவப்பு விளக்குச் சமிக்ஞைகளை மீறியதாகவும் எதிர்த்திசையில் வாகனம் ஓட்டியதாகவும் கூறப்படுகிறது.
காவல்துறை துரத்தியபோது அவனது கார் 5 வாகனங்கள் மீது மோதியது. பின்னர் மரீன் பரேட் ரோடு (Marine Parade Road) - ஸ்டில் ரோடு சவுத் (Still Road South) சந்திப்பில் ஆறாவது கார் மீது மோதி நின்றது.
அந்தக் கார் ஓட்டுநரும், 15 வயதுப் பயணியும் காயமடைந்தனர்.
காரிலிருந்து ஓட முயன்ற இளையரைக் காவல்துறை மடக்கிப் பிடித்தது.
இளையர் ஓட்டிய காரில் மின்சிகரெட்டும் அதன் குப்பியும் (pod) இருந்தன. ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஜனவரி 16 சம்பவத்திற்காக இளையர் மீது 10 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
குற்றச்சாட்டைப் பொறுத்துத் தண்டனைகள் விதிக்கப்படும்.
உரிமமின்றி வாகனம் ஓட்டினால்: 2,000 வெள்ளி வரை அபராதம்.
ஆபத்தான முறையில் வாகனமோட்டி காயம் ஏற்படுத்தினால்: அதிகபட்சம் 10,000 வெள்ளி அபராதம், 3 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும்.
காவல்துறை நிறுத்தச் சொல்லியும் மீறினால்: 1,000 வரை அபராதம், 3 மாதச் சிறை அல்லது இரண்டும்.