சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா நிலவரம்... சிலரின் கருத்து
தைப்பூசத் திருவிழா மீண்டும் கிருமித்தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகளுடன் இடம்பெறுகிறது.
மக்கள் பாதுகாப்புடன் இருக்க அத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
திருவிழாவில் கலந்துகொண்ட சிலர் அதுபற்றிய கருத்துகளை 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டனர்.
நான் வேலை செய்யும் நிறுவனத்துடன் அன்னதானத்தில் ஈடுபட்டேன்
என்றார் சங்கீதா ராம். அன்னதானம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றதாக அவர் சொன்னார்.
அது எந்தவிதமான தடங்கலுமின்றி இடம்பெற்றதை அவர் சுட்டினார். மக்கள் அனைவரும் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதை சங்கீதா பாராட்டினார்.
ஒருவிதப் பாதுகாப்பு உணர்வு இருந்தது
என்றார் கன்னிகா.
மக்கள் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளுக்கிணங்கிச் செயல்படுவதைக் கண்டதாக அவர் செய்தியுடன் பகிர்ந்தார். அவர்கள் அவ்வாறு செய்துவருவதால் ஒருவிதத் திருப்தியும் பாதுகாப்பு உணர்வும் ஏற்படுவதாகக் கன்னிகா குறிப்பிட்டார்.
இசைவாத்தியக் கருவிகளின் முழக்கவொலியின்றி தைப்பூசத் திருவிழா, தைப்பூசத் திருவிழாவாகவே இல்லை என்பதுபோல் தோன்றுகிறது
என்று குறிப்பிட்டார் பூர்ணிமா.
வழக்கமான தைப்பூசத் திருவிழா ஊர்வலத்தைப் போல் இல்லாமல் இந்த ஆண்டுத் திருவிழா மிக அமைதியாக இடம்பெறுவதைக் கவனித்தார் அவர்.
பல கட்டுப்பாடுகள் நடப்பில் இருப்பதால் அவ்வாறு உள்ளது என்றும் அவர் விளக்கினார். இருப்பினும், அத்தகைய கட்டுப்பாடுகள் இருப்பதால்தான் மக்களுக்குப் பாதுகாப்பு இருப்பதை அவர் சுட்டினார்.
எனினும் தைப்பூசத் திருவிழா சுமுகமாக இடம்பெறுவதை அவர் பாராட்டினார்.
மக்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்திற்கொண்டு தைப்பூசத் திருவிழா இடம்பெறுகிறது. பக்தர்கள் தொடர்ந்து அவர்களுடைய வழிபாட்டுணர்வை வெளிக்கொணரும் வண்ணம் உள்ளனர். அதற்கிடையே பெரும்பாலானோர் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுகின்றனர்.