சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
தீமிதித் திருவிழா - மழை பெய்தால் தீக்குழிக்கு என்னவாகும்?
படம்: மெலிசா
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் இன்று (20 அக்டோபர்) தீமிதித் திருவிழா நடைபெறுகிறது.
செளத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் மாலை ஆறு மணிக்குத் தீமிதி தொடங்கும்.
பூக்குழி காலை எட்டரை மணி முதல் அதற்காகத் தயாராகி வருவதாக இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்தது.
தலைமைப் பண்டாரம் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீ மாரியம்மன் கோயிலைச் சென்றடைவதற்குள் தீக்குழி சரியான பதத்தில் இருப்பது உறுதிசெய்யப்படும்.
3,000க்கும் அதிகமான பக்தர்கள் தீமிதிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழை பெய்தால் தீக்குழியைப் பாதுகாக்கச் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆலய நிர்வாகம் சொன்னது.
இவ்வாண்டு துத்தநாகம் அதாவது zinc எனும் உலோகத் தகடுகளை அதிகளவில் வாங்கியிருப்பதாகத் தீக்குழியைத் தயார் செய்யும் குழுவின் தலைவர் திரு ம. சேகர் 'செய்தி'யிடம் கூறினார்.
மழை பெய்தால் தகடுகளை வைத்துத் தீக்குழி மூடப்படும். மழை நின்றவுடன் புதிய விறகுக் கட்டைகள் குழியில் போட்டு எரிக்கப்படும். பின்னர் தீக்குழி சரியான பதத்தில் இருப்பது மீண்டும் உறுதிசெய்யப்படும் என்று திரு சேகர் சொன்னார்.
மழை பெய்தால் என்ன செய்வது என்று தொண்டூழியர்களுக்கும் குழுவினருக்கும் தகுந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் 'செய்தி'யிடம் தெரிவித்தார்.