கிறிஸ்துவ, கத்தோலிக்க நிலையங்களில் வெள்ளை துகள் கண்டுபிடிப்பு....மூவர் கைது
சிங்கப்பூரில் கடந்த வாரம் கிறிஸ்துவ, கத்தோலிக்க நிலையங்களில் வெள்ளைத் துகள் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் 63 வயதுப் பெண். எஞ்சிய இருவரும் முறையே 52, 66 வயது ஆடவர்கள் என்று காவல்துறை தெரிவித்தது.
52 வயது ஆடவரிடமிருந்து வெள்ளைத் துகள் பறிமுதல் செய்யப்பட்டது. செய்திதாள்கள், உப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை எரித்து அதிலிருந்து அந்த வெள்ளைத் துகள் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் 11 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவரும் அவர்களில் அடங்குவர்.
(ஜனவரி) இம்மாதம் 17, 18ஆம் தேதிகளில் ஆர்மேனியன் ஸ்ட்ரீட்டிலும் வாட்டர்லூ ஸ்ட்ரீட்டிலும் வெள்ளை துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை கத்தோலிக்க நிலையம், பைபிள் ஹவுஸுடன் தொடர்புடையன என்று காவல்துறை தெரிவித்தது.
எனினும் அந்த துகள்களில் ஆபத்தான பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
விசாரணை தொடர்கிறது.