மார்சிலிங் கிரசெண்ட் வீட்டில் தீ - 2 குழந்தைகள் காப்பாற்றப்பட்டன
மார்சிலிங் கிரசெண்ட் (Marsiling Crescent) வட்டாரத்திலுள்ள கழக வீட்டில் மூண்ட தீயிலிருந்து 2 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளன.
புளோக் 218-இல் ஏற்பட்ட சம்பவம் குறித்து நேற்றிரவு (22 ஜூன்) சுமார் 10.40 மணிவாக்கில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் கூறினர்.
வீட்டின் படுக்கை அறையிலுள்ள பொருள் ஒன்று தீப்பற்றிக்கொண்டதாகக் கூறப்பட்டது.
வீடு முழுவதும் வெப்பத்தாலும், புகையாலும் சேதமடைந்திருந்ததாகத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.
வீட்டின் வரவேற்பறையில் 2 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
காவல்துறையினரால் மீட்கப்பட்ட அவை பின்னர் KK மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டன.
அக்கம்பக்கத்தில் வசிக்கும் சுமார் 60 பேர் காவல்துறையினரால் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
தீ எவ்வாறு மூண்டது என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.