சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
டெல்ட்டா...ஓமக்ரான்...அடுத்து என்ன? புதிய இயல்புநிலை இன்னும் எத்தனை முறை மாறும்? - நிபுணர் சொல்வது...
கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் மாறிக்கொண்டே இருக்கும் வேளையில் மக்களின் 'இயல்புநிலை' என்பதும் மாறிக்கொண்டே வருகிறது.
விரக்தியும் அதிகரித்துள்ளது.
COVID-19 நோய்க்கு முன்னைய காலம் திரும்புமா என்றும் நோய்ப்பரவல் முடிவுக்கு வருமா என்றும் மக்களின் மனத்தில் கேள்விகள் எழுந்துள்ளன.
அவற்றில் சிலவற்றுக்குப் பதிலளித்தார் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் இந்துமதி.
"டெல்ட்டா...ஓமக்ரான்...அடுத்து என்ன?"
கிருமிப்பரவல் அதிகமாக இருக்கும் இடங்களில் புதிய கிருமி ரகங்கள் உருவாகும். சளிக்காய்ச்சலுடன் தொடர்பிலான கிருமி எவ்வாறு ஒவ்வொரு பருவத்திலும் மாறுகிறதோ, அதுபோல் இதுவும் செயல்படுகிறது.
புதுவகை கிருமி ரகங்கள் அக்கறைக்குரியவையா என்பது அவற்றின் வீரியத்தைப் பொறுத்திருக்கும்.
"புதிய இயல்புநிலை இன்னும் எத்தனை முறை மாறும்?"
'புதிய இயல்புநிலை' என்பது நிச்சயம் நிலைபெறும். ஆண்டுதோறும் காணப்படும் சுவாசத் தொற்றுநோய்களைப் போன்று இதுவும் மாறிவிடும். பெரும்பாலோருக்குத் தடுப்புமருந்துகள் போதுமான பாதுகாப்பை வழங்கும் என்பதால் அவர்கள் தடையின்றி அன்றாட வாழ்க்கையைத் தொடரமுடியும். சிலருக்கு மட்டுமே சிக்கல்கள் ஏற்படலாம்; மருத்துவமனை சிகிச்சை அவசியமாகலாம்.
"அப்படி என்றால் COVID-19 எப்போதுதான் முடிவுக்கு வரும்?"
COVID-19 கிருமிப்பரவல் முடிவுக்கு வரும். ஆனால், தொற்றுநோய் என்பது நிரந்தரமாக இருக்கும். நீண்டகாலக் கண்ணோட்டத்தில் நோயைச் சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் மட்டுமே கையாள வேண்டியிருக்கும். நோயை ஏற்படுத்தக்கூடிய மற்ற நுண்ணுயிர்களைப் போன்று மக்களின் மத்தியில் இந்தக் கொரோனா கிருமியும் இருக்கும்.
தொடக்கத்தில் இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்பதிலிருந்து மூன்றிலிருந்து நான்கு முறை தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை வந்துவிட்டது.
'தடுப்பூசி போட்டபிறகுதான் எனக்கு இந்தப் பாதிப்பு...ஏதோ ஒரு பக்கவிளைவாக இருக்கக்கூடும்,' என்று நம்மில் சிலர் சொல்வதைக் கேட்டிருப்போம்..
"பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும் பக்கவிளைவுகளுக்கு அப்பால் வேறு பக்கவிளைவுகள் உண்டா?"
தடுப்பூசியின் தொடர்பில் பல்வேறு பக்கவிளைவுகளின் பட்டியல்கள் ஊடகத் தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இருப்பினும் அனைத்தும் தடுப்புமருந்துகளால் ஏற்படுவதில்லை. அவை தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சமயத்தில் ஏற்பட்டவையாக இருக்கக்கூடும். எனவே, அவற்றுக்குத் தொடர்பு இருக்கலாம் அல்லது தொடர்பில்லாமலும் இருக்கலாம்.
அவற்றுக்கு உண்மையில் தடுப்புமருந்துடன் தொடர்பு உள்ளதா என்பதைத் தீர்மானிக்கப் பக்கவிளைவுகள் குறித்த அனைத்துப் புகார்களும் பரிசீலிக்கப்படுகின்றன.