சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"பாதுகாப்பானது, பிடித்துப் போய்விட்டது" - பலர் தொடர்ந்து வெளிப்புறங்களில் முகக்கவசம் அணிய விரும்புகின்றனர்: 'செய்தி' கருத்தாய்வு
சிங்கப்பூரில் இன்றுமுதல் சில முக்கியக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. அவற்றில் ஒன்று - வெளிப்புறங்களில் முகக்கவசம் அணியும் கட்டாயம்.
சுமார் ஈராண்டுக்குப் பிறகு மக்கள் மீண்டும் வெளியிடங்களில் முகக்கவசமின்றி இருக்கலாம்.
நீண்டகாலமாக முகத்தைச் சிறையில் அடைத்தது போன்ற உணர்வை நிறுத்திக்கொள்ள மக்கள் விரும்புகிறார்களா... அல்லது வெளிப்புறங்களில் முகக்கவசத்தை அணியும் கட்டாயம் தளர்த்தப்பட்ட பின்னரும் மக்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்க விரும்புகிறார்களா?
அதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள 'செய்தி' நேற்று (மார்ச் 28) அதன் Instagram பக்கத்தில் வாக்களிப்புக் கருத்தாய்வொன்றை (poll) நடத்தியது.
மார்ச் 29ஆம் தேதியிலிருந்து வெளிப்புறங்களில் நீங்கள் முகக்கவசம் அணிவீர்களா?
என்ற கேள்வி கேட்கப்பட்டது.
முடிவுகள்:
- "முகக்கவசம் அணிவேன்" என்று கூறியவர்கள்: 76%
- "முகக்கவசம் அணியமாட்டேன்" என்று கூறியவர்கள்: 24%
வெளியே இருக்கும்போது திடீரென ஒருவர் என் பக்கமாகத் தும்மினால் எனக்கு நோய் வந்துவிடும். முகக்கவசம் அணிவதில்தான் பாதுகாப்பு இருக்கிறது
என்று சொன்னார் 62 வயதாகும் திருவாட்டி சுந்தராம்பிகை.
பழகிப் போய்விட்டது!
என்று சொன்னார் 24 வயதாகும் குமாரி சத்தியாவதி கண்ணன்.
போன இரண்டு ஆண்டுகளாக முகக்கவசம் அணிவதால் ஒருவிதப் பாதுகாப்பு உணர்வு இருந்தது. நோயும் நம்மிடம் பரவாது, பிறர் நாம் யார் என்றும் கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது. அது எனக்குப் பிடித்துப் போய்விட்டது, அதனால் முகக்கவசத்தைத் தொடர்ந்து அணிவேன்
என்று கூறினார் 41 வயதாகும் திரு கோபாலகிருஷ்ணன்.
இந்த விடுதலைக்கு நான் மறுப்புத் தெரிவிக்கமாட்டேன். நிச்சயமாகச் சுதந்திரமாக வெளியிடங்களில் முகக்கவசமின்றி இருப்பேன்!
என்று 55 வயதாகும் திரு சுகுமாரன் 'செய்தி'யிடம் பகிர்ந்தார்.
நம் சமூகத்தினரில் பெரும்பாலானவர்கள் நோய்ப்பரவலிலிருந்து பாதுகாப்பாக இருக்க விரும்புவதால் தொடர்ந்து வெளிப்புறங்களில் முகக்கவசம் அணிய விரும்புகின்றனர்.
அவர்களில் ஒருசிலர் மட்டுமே வெளியே செல்லும்போது முகக்கவசமின்றிச் செல்ல விரும்புகின்றனர்.
நீங்கள் எப்படி?