பொதுத்தேர்தல் 2025: மாதிரி வாக்கு எண்ணிக்கை... அப்படி என்றால்?

Najeer Yusof/ TODAY
சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (மே) 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மக்கள் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கலாம்.
அதன் பின்னர் வாக்குகள் எண்ணப்படும்.
முதலில் மாதிரி வாக்கு எண்ணிக்கை (sample count) வெளியிடப்படும்.
அப்படி என்றால்?
🗳️ தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கக்கூடும் என்பதைக் கணிக்க மாதிரி வாக்கு எண்ணிக்கை வழிவகுக்கிறது.
🗳️ 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது மாதிரி வாக்கு எண்ணிக்கை முதன்முறையாகப் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது.
அது ஏன் முக்கியம்?
🗳️ வாக்குகள் எண்ணப்படும் வேளையில் அதிகாரபூர்வமற்ற ஊகங்கள், தவறான தகவல்கள் பரவுவதைத் தவிர்க்க மாதிரி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.
🗳️ தேர்தல் அதிகாரிகள் தேர்தல் முடிவுகளைச் சரிபார்க்கவும் அது உதவுகிறது.
மாதிரி வாக்கு - எப்படி எண்ணப்படுகிறது?
🗳️ வாக்கு எண்ணப்படும் ஒவ்வொரு நிலையத்திலும் 100 வாக்குகள் எந்த ஓர் அடிப்படையுமின்றித் தேர்ந்தெடுக்கப்படும்.
🗳️ அவற்றில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்திருக்கும் வாக்குகள் எண்ணப்படும்.
🗳️ வேட்பாளர் அல்லது அவரது முகவர் முன்னிலையில் அது நடத்தப்படும்.
🗳️ ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்திருக்கும் செல்லுபடியான வாக்குகளின் விழுக்காடு எத்தனை என்பது மாதிரி வாக்குகளாகக் காட்டப்படும்.
🗳️ எஞ்சிய வாக்குகள் தொடர்ந்து எண்ணப்படும்.
🗳️ தேர்தல் முடிவுகளும் மாதிரி வாக்கு எண்ணிக்கையும் வேறுபடலாம்.
🗳️ தேர்தல் முடிவுகளைத் தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிக்கும்வரை மக்கள் காத்திருக்கவேண்டும்.