6 வயது மகள் மரணம், அம்மா காயம் - பெண் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு
This audio is generated by an AI tool.
சைனாடவுனில் 6 வயதுச் சிறுமி மாண்ட கார் விபத்தில் சம்பந்தப்பட்ட 38 வயதுப் பெண் ஓட்டுநர்மீது இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கவனமில்லாமல் காரைச் செலுத்தி மரணம் விளைவித்தது, கடுமையாகக் காயம் ஏற்படுத்தியது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டன.
இந்த வழக்கின் சாட்சியாக இருக்கக்கூடிய அந்தப் பெண்ணின் ஆறு வயது மகனின் அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில், அவரது பெயரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடையுத்தரவு அந்தப் பெண்ணுக்கும் பொருந்தும் என்பதால், சிறுவனின் தாய் என்ற முறையில் அவரது பெயரையும் ஊடகங்கள் வெளியிட முடியாது.
இந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி சைனா டவுன் புத்தர் புனிதப்பல் ஆலயத்துக்கு வெளியே உள்ள திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில் விபத்து நடந்தது.
விபத்தில் 6 வயது ஷேய்னா லஷிரா ஸ்மாராடியானி (Sheyna Lashira Smaradiani) உயிரிழந்தார். சிறுமியின் உடல் ஜக்கார்த்தாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு பிப்ரவரி 8ஆம் தேதி அடக்கம் செய்யப்பட்டது.
விபத்தில் காயமுற்ற சிறுமியின் தாயார் திருவாட்டி ரைஷா அனின்றா பஸ்காசிஸ்வி (Raisha Anindra Pascasiswi) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் இந்தோனேசியாவுக்குத் திரும்பிவிட்டதாக நம்பப்படுகிறது.
வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பெண் ஓட்டுநர் தம்மீது கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்கிறாரா இல்லையா என்பது குறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.
வழக்குக்கு முந்தைய விசாரணை மே 13ஆம் தேதி நடைபெறும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கவனமின்றி காரை ஓட்டி மரணம் விளைவித்ததற்கு அதிகபட்சம் 3 ஆண்டு வரை சிறை, 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
கடுமையாகக் காயம் ஏற்படுத்திய குற்றத்திற்குக் கூடியபட்சம் 2 ஆண்டு வரை சிறை, 5,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
குறிப்பிட்ட காலத்துக்கு வாகனம் ஓட்டவும் பெண்ணுக்குத் தடை விதிக்கப்படலாம்.