பேருந்து ஓட்டுநரின் கையைப் பிடித்து இழுத்து, அவரை அடித்த பெண்ணுக்குச் சிறை
சரியான பேருந்து நிறுத்துமிடத்தில் இறங்கத் தவறியதை அடுத்துப் பேருந்து ஓட்டுநரின் கையைப் பிடித்து இழுத்து, அவரின் முகத்தில் அடித்த பெண்ணுக்கு 8 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 17ஆம் தேதி 38 வயது டான் சுன் ஃபேங்க் (Tan Chun Feng), பேருந்து எண் 143இல் ஏறினார்.
நிறுத்துமிடத்தைத் தவறவிட்ட டான், பேருந்து ஓட்டுநர் வேண்டுமென்றே அவரை இறங்க அனுமதிக்கவில்லை என்று நினைத்தார்.
பேருந்து ஓட்டுநர் தன்னைத் துன்புறுத்தியதாகக் குற்றஞ்சாட்டிய டான் அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டினார்.
அதைக் காணொளியாகப் பதிவுசெய்தார்.
ஓட்டுநர் பேருந்தைத் தொடர்ந்து ஓட்டிக்கொண்டிருந்தபோது டான் ஓட்டுநர் அணிந்திருந்த முகக்கவசத்தைப் பிடுங்கினார்.
அதைத் தடுக்க பேருந்து ஓட்டுநர் முயற்சி செய்தார்.
அப்போது டான் ஓட்டுநரின் இடது கையை இழுத்து அவரின் முகத்தை அடித்தார்.
அதில் ஓட்டுநரின் மூக்குக்கண்ணாடி கீழே விழுந்தது.
அதன் பின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்திக் காவல்துறையினர் வரும்வரை காத்திருந்தார்.
டான் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் முறையில் நடந்துகொண்டதற்கு அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.