இல்லப் பணிப்பெண்ணைத் துன்புறுத்திக் கொன்றதை ஒப்புக்கொண்ட பெண்
இல்லப் பணிப்பெண்ணைக் கொன்றதாக 40 வயதுப் பெண் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

(கோப்புப் படம்)
இல்லப் பணிப்பெண்ணைக் கொன்றதாக 40 வயதுப் பெண் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
24 வயதுப் பணிப்பெண், 2015-ஆம் ஆண்டிலிருந்து துன்புறுத்தலுக்கு ஆளானார்.
மியன்மாரைச் சேர்ந்த அவர் காய்த்திரி முருகையன் என்பவரின் வீட்டில் பணிபுரிந்து வந்தார்.
வீட்டில் காய்த்திரியுடன், அவரது தாயார், கணவர், பிள்ளைகள் இருவர், வாடகைதாரர்கள் இருவர் வசித்து வந்தனர்.
பியாங் ஙாய் டோன் (Piang Ngaih Don) எனும் அந்த பணிப்பெண் மெதுவாக வேலை பார்த்ததாகவும், அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டதாகவும் சுகாதாரத்தைப் பின்பற்றுவதில்லை என்றும் காய்த்திரி எண்ணினார்.
அவர் தொடக்கத்தில் பணிப்பெண்ணை நோக்கிக் குரலை உயர்த்தித் திட்டியதாகக் கூறப்பட்டது.
இருப்பினும் வேலையில் சேர்ந்து 5 மாதங்கள் ஆன நிலையில், காய்த்திரி பணிப்பெண்ணைத் துன்புறுத்தத் தொடங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அவர் தினந்தோறும் பணிப்பெண் மீது ஏறி மிதிப்பது, குத்துவது, அறைவது, உதைப்பது, பொருள்களால்
அடிப்பது போன்ற துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
காய்த்திரி, அந்தப் பெண்ணுக்குப் போதிய உணவு அளிக்கவில்லை என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
பணிப்பெண் கிட்டத்தட்ட 15 கிலோகிராம் உடல்எடை குறைந்து, 24 கிலோகிராம் எடையில் இருக்கும் நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25-ஆம் தேதியன்று, காய்த்திரி பணிப்பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்ததோடு, அவரைக் குத்தி, தலையை ஒரு பொருளால் அடித்தார்.
காய்த்திரியின் தாயாரும் பெண்ணைத் துன்புறுத்தியதை அடுத்து, இருவரும் பணிப்பெண் மீது தண்ணீர் ஊற்றினர்.
அவர்கள் பெண்ணுக்கு உணவு அளிக்காமல், அவரை சன்னல் கம்பிகளுடன் கயிற்றால் கட்டினர்.
பணிப்பெண்ணை 26-ஆம் தேதி அதிகாலைவேளையில் எழுப்ப முயன்றபோது, பெண் அசைவின்றிக் காணப்பட்டார்.
காயத்திரியும் அவரது தாயாரும் பொய்க் காரணத்தைக் கூறி, தங்களுடைய வீட்டிற்கு மருத்துவரை அழைத்தனர்.
பணிப்பெண் மாண்டுவிட்டதாக மருத்துவர் பின்னர் உறுதிசெய்தார்.
காயத்திரி 28 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
மேலும் 87 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்படும்போது கருத்தில்கொள்ளப்படும்.
தண்டனை பின்னொரு நாளில் விதிக்கப்படும்.
அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க அரசாங்கத் தரப்பு பரிந்துரைத்துள்ளது.
அந்தக் குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்படலாம் அல்லது அதிகபட்சமாக 20 ஆண்டுச் சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
ஆனால் பெண்களுக்குப் பிரம்படி விதிக்கப்பட மாட்டாது.