போலி பாலியல் பலாத்காரப் புகாரைக் கொடுத்ததாகப் பெண் ஒப்புதல்
CNA/Jeremy Long
This audio is generated by an AI tool.
பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆடவர் மீது போலியான குற்றச்சாட்டைச் சுமத்தியதாக 20 வயதுப் பெண் ஒப்புக்கொண்டார்.
பெண்ணும் ஆடவரும் Sugarbook செயலி மூலம் தொடர்புகொண்டனர். பெண்ணின் அனுமதியுடன் இருவரும் உடலுறவு கொண்டனர்.
அதற்குப் பின் பெண் ஆடவரிடம் 1,200 வெள்ளி கட்டணமாகக் கேட்டார். ஆடவர் 500 வெள்ளியை மட்டுமே கொடுக்க முன்வந்தார்.
கோபம் கொண்ட பெண் அவரைப் பற்றிப் பொய்ப் புகாரைக் காவல்துறையிடம் அளித்தார்.
சம்பவம் நடந்த போது பெண்ணுக்கு 19 வயது. ஆடவருக்கு 43 வயது.
இவ்வாண்டு மார்ச் 19ஆம் தேதி கிலேரிஸ் லிங் (Claris Ling) எனும் அந்தப் பெண் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று கிலேரிஸிடம் பேசியபோது அவர் பொய்யை மீண்டும் கூறினார். ஆனால் அதிகாரிகள் கண்காணிப்புக் கேமராப் படங்களை ஆராய்ந்தபோது கிலேரிஸின் கூற்றுகளைக் குறித்து சந்தேகம் எழுந்தது.
மீண்டும் அவரிடம் அதைப் பற்றிக் கேள்வி கேட்ட போது கிலேரிஸ் தாம் பொய் கூறியதை ஒப்புக்கொண்டார்.
தண்டனை பின்னொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை ஊழியரிடம் பொய்த் தகவல்களை வழங்கினால் அதிகபட்சம் ஈராண்டுச் சிறைத்தண்டனை, அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஒருவரை மிரட்டும் வகையில் நடந்துகொண்டால் அதிகபட்சம் 6 மாதச் சிறைத்தண்டனை, 5,000 வெள்ளிவரை அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.