கைத்தொலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது மகனைக் கத்தியால் குத்திய பெண்ணுக்குச் சிறை

(படம்: Unsplash)
கைத்தொலைபேசியை அனுமதியின்றி எடுத்து விளையாடிய மகனைக் கோபத்தில் கத்தியால் குத்திய பெண்ணுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத அந்த 41 வயதுப் பெண்ணுக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சம்பவம் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது.
சிறுவன் அவனது அம்மாவின் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்து அவர் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் கைத்தொலைபேசியை எடுத்திருக்கிறான்.
அறைக்குள் செல்லக்கூடாது என்று கூறியும் அவன் அதை மீறிக் கைத்தொலைபேசியை எடுத்து விளையாடத் தொடங்கினான்.
கோபமடைந்த பெண் சமையலறையிலிருந்து 21 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தியை எடுத்து வந்தார்.
மெத்தையில் படுத்திருந்த மகனின் போர்வையை இழுத்து குத்தப் பார்த்திருக்கிறார்.
கத்தி போர்வையில் பட்டு, கிழிந்து சிறுவனின் தொடையைக் கிழித்தது.
ரத்தம் பீறிட தனது அறைக்கு ஓடிய சிறுவன் காவல்துறைக்கு அழைத்து நடந்ததைக் கூறினான்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவன் சில வார சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினான்.
1999ஆம் ஆண்டு அந்தப் பெண் மீது இதே போன்ற மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை அரசாங்கத் தரப்பு சுட்டியது.
மிதமான மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர், அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
தண்டனைக் காலத்தை முடிவு செய்ய அதுவும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.