COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு விடுப்பு - ஆலோசனையைப் புறக்கணிக்கும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கான விடுப்பு ஏற்பாடு குறித்த மனிதவள அமைச்சின் ஆலோசனையை வேண்டுமென்றே புறக்கணிக்கும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
முதலாளிகளுக்கான வேலை அனுமதிச் சலுகைகள் ரத்துசெய்யப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
அமைச்சின் ஆலோசனைப்படி, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவச் சான்றிதழ் இல்லையென்றாலும் வேலையிலிருந்து விடுப்புப் பெற அனுமதிக்க வேண்டும்.
தனிமைப்படுத்தப்படும் காலத்தில், ஊதியமில்லா விடுப்பில் செல்லுமாறு ஊழியர்களிடம் கூறக்கூடாது.
முதலாளிகள் அத்தகைய வழிகாட்டிகளைப் பின்பற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்பட்டது.
ஆலோசனையைப் பின்பற்றாத முதலாளிகள் குறித்து ஊழியர்கள் அமைச்சுக்குத் தகவல் அளிக்கலாம் என்று டாக்டர் டான் சொன்னார்.
அது குறித்து முதலாளிகளிடம் விசாரித்து, உரிய ஆலோசனையைப் பின்பற்றுமாறு அவர்களுக்கு
அறிவுறுத்தப்படும் என்றார் அவர்.
அதன் பிறகும், ஆலோசனையைப் புறக்கணிக்கும் முதலாளிகள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்பட்டது.