பிடோக் கடைத்தொகுதியில் Anthrax தாக்குதல் எனப் பொய்ப் புகார் அளித்ததாக இளையர் மீது குற்றச்சாட்டு
பிடோக்கில் உள்ள கடைத்தொகுதியிலும் பேருந்து முனையத்திலும் ஓர் ஆடவர் Anthrax கிருமியை விடுவிக்கப்போவதாய்ப் பொய்ப் புகார் அளித்ததாக இளையர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்த 22 வயது இளையரின் பெயர் மெர்குரி ஜேமி ஆலிஸ் (Mercury Jamie Alice) என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆபத்தான ஒன்றைப் பற்றிப் பொய்த் தகவல் அளித்ததாகவும் ஆபாசக் காணொளிகள், படங்களை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூரரான அவர் சென்ற ஆண்டு தேசிய தினத்தன்று மாலை வேளையில் இணையம் வழி வேறொரு பெயரில் தகவல் அளித்திருந்தார்.
தேசிய தினத்தன்று பிடோக் கடைத்தொகுதியிலும் பேருந்து முனையத்திலும் anthrax கிருமி வெளியிடப்படும் என்று மெர்குரி கூறியிருந்தார்.
ஜூரோங் வெஸ்ட்டில் வசிக்கும் ஆடவர் ஒருவர் அவ்வாறு செய்வார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
Anthrax நச்சுக் கிருமி மனிதர்களையும் விலங்குகளையும் கடுமையாகப் பாதிக்கக்கூடியது.
அதனுடன் தொடர்பில் வருவோர் நோய்வாய்ப்படுவர்.
2020ஆம் ஆண்டு ஏப்ரலுக்கும் 2021ஆம் ஆண்டு ஆகஸ்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மெர்குரி தனது iPhoneஇல் 72 ஆபாசக் காணொளிகளும் 60 ஆபாசப் படங்களும் வைத்திருந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது.
ஆபத்தானவற்றைப் பற்றிப் பொய்த் தகவல்கள் அளிப்போருக்கு 7 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது 50,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
வழக்கு அடுத்த மாதம் (ஜூன் 2022) 22ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-Today