ரத்த தானம் - இளையர்கள் தயங்குவது ஏன்?
படம்: Health Sciences Authority
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் ரத்தம் தேவைப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் சுமார் 1.3 விழுக்காடு அதிகரிக்கிறது.
மூத்தோர், புற்று நோயாளிகள் ஆகியோரின் எண்ணிக்கை உயர்வது அதற்குக் காரணம் என்று சுகாதார அறிவியல் ஆணையம் கூறுகிறது.
இதற்கிடையில் கடந்த பத்தாண்டில் ரத்த தானம் செய்யும் இளையர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துவிட்டது.
20,000ஆக இருந்த அந்தத் தொகை தற்போது 9,600க்கும் குறைவாக இருக்கிறது.
மூப்படையும் மக்கள்தொகை உயரும்வேளையில் ரத்தத்துக்கான தேவை மேலும் அதிகரிக்கும்.
அந்தத் தேவைக்கு ஈடுகொடுக்க இன்னும் 7 ஆண்டில் ரத்த வங்கிகளில் போதிய இருப்பு இல்லாமல் போகக்கூடும்.
தேசிய ரத்த தானத் திட்டத்தின் 80ஆம் ஆண்டுநிறைவு இன்று கொண்டாடப்படுகிறது.
அதை முன்னிட்டு வெளியான அறிக்கையில் அந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
இளையர்கள் ரத்தம் கொடுக்கத் தயங்குவது ஏன்?
"வைட்டமின் D, சிவப்பு ரத்த அணுக்கள் அளவு குறைவாக உள்ளது"
"சருமப் பிரிச்சினை"
"நரம்பை அடையாளம் காண்பதில் சிக்கல்"
இவையே 'செய்தி'யிடம் பேசிய பெரும்பாலான இளையர்கள் ரத்த தானம் செய்யாமல் இருப்பதற்கான காரணங்கள் என்று தெரிவித்தனர்.
"மருத்துவக் குறைபாடுகள் இருந்தால் நிச்சயம் ரத்ததானம் செய்யமுடியாது என்றில்லை. சிலவகைக் குறைபாடு உடையவர்கள் தொடர்ந்து ரத்தம் கொடுக்கமுடியும். எனவே உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது" என்றார் பலமுறை ரத்ததானம் செய்த குமாரி சாமுண்டீஸ்வரி.
அடிக்கடி ரத்த தானம் செய்யும் இளையர்கள், ஏன் செய்கின்றனர்?
"முதன்முதலில் ரத்தம் கொடுக்கச் சென்றபோது வலிக்குமோ என்று பயந்தேன். ஆனால் எறும்புக்கடி போல்தான் இருந்தது. சிறிதுநேரம் பலவீனமாக இருந்தது. பிறகு சரியாகிவிட்டது. பயமும் நீங்கியது," என்று சொன்னார் பலமுறை ரத்த தானம் செய்த திரு சுப்பையா சரவணன்.
தமக்கு இருக்கும் B ரத்த வகையைப் போல மற்றவர்களுக்கும் அரிய வகை ரத்தம் இருக்கலாம்; அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும்போது பற்றாக்குறை ஏற்படக்கூடாது. அதற்காகவே அடிக்கடி ரத்த தானம் செய்கிறேன் என்று 'செய்தி'யிடம் அவர் கூறினார்.
"16 வயதிலிருந்து ரத்தம் கொடுக்க ஆர்வமிருந்தது. ஆனால் உடல் எடை குறைந்தபட்சம் 45 கிலோவாக இருக்கவேண்டும். அதற்காக எடையை அதிகரித்தேன். ரத்தம் கொடுக்கத் தொடங்கினேன்," என்றார் சாமுண்டீஸ்வரி.
மூன்று மாதத்துக்கு ஒருமுறை ரத்தம் கொடுக்கச் செல்லும் அவர் தன்னுடன் ஒரு நண்பரைத் தவறாமல் அழைத்துச் செல்வதாகவும் சொன்னார்.
நண்பர்களுடன் ஏதாவது நடவடிக்கையில் ஈடுபட ஆசைப்படும் இளையர்கள் ரத்த தானம் செய்வதையும் கருத்தில்கொள்ளத் தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என்றும் கருதுகிறார் சாமுண்டீஸ்வரி.