MH370 விமான விசாரணை அறிக்கை மார்ச்சில் வெளியிடப்படும்
காணாமல் போன விமானத்திற்கான தேடலின் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் பற்றி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று மலேசியப் போக்குவரத்துத் துணை அமைச்சர் அசீஸ் கப்ராவி கூறினார். அவ்வறிக்கை, வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி வெளியிடப்படும்
சிங்கப்பூர்: காணாமல் போன MH370 விமானத்தின் தொடர்பிலான இடைக்கால விசாரணை அறிக்கை, வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி வெளியிடப்படும்.
அந்த விமானம் காணாமல் போய், ஓராண்டாவதற்கு ஒரு நாளுக்கு முன்னர், மலேசிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை (Department of Civil Aviation) அதனை வெளியிடும். மலேசியப் போக்குவரத்துத் துணை அமைச்சர் அசீஸ் கப்ராவி (Aziz Kaprawi) அந்தத் தகவல்களைத் தெரிவித்ததாக, The New Straits Times என்ற மலேசிய நாளேடு குறிப்பிட்டது.
விசாரணை அறிக்கையிலுள்ள விவரங்களைத் தற்போதைக்குத் தெரிவிக்கமுடியாது என்றார் அவர். ஆனால், காணாமல் போன விமானத்திற்கான தேடலின் தொடர்பில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் பற்றி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.
MH370 விமானம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தேதி, கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ச்சிங்கிற்குச் சென்றுகொண்டிருந்தபோது காணாமல்போனது. அதில் 239 பேர் இருந்தனர்.