பிரான்ஸ் காற்பந்து அணித் தலைவரானார் கிலியான் எம்பாப்பே
பிரான்ஸ் தேசியக் காற்பந்து அணித் தலைவராக கிலியான் எம்பாப்பே (Kylian Mbappe) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹூகோ லோரிஸ் (Hugo Lloris) ஓய்வுபெற்றதை அடுத்து, எம்பாப்பே அந்தப் பொறுப்பை ஏற்றிருப்பதாக AFPக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அணிப் பயிற்றுவிப்பாளர் டிடியேர் டேஷாம்ப்ஸுடன் (Didier Deschamps) பேச்சுவார்த்தை நடத்திய 24 வயது எம்பாப்பே அணித் தலைவராகும் பரிந்துரையை ஏற்றுக்கொண்டார்.
அர்ஜென்ட்டினாவுக்கு எதிரான அண்மை உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் தோற்றதை அடுத்து அனைத்துலகக் காற்பந்தாட்டங்களில் இருந்து ஓய்வுபெறுவதாக லோரிஸ் அறிவித்தார்.
36 வயது லோரிஸ் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அணித் தலைவராக இருந்துள்ளார்.
இதற்கிடையே, அணித் தலைவராக எம்பாப்பே களமிறங்கவுள்ள முதல் ஆட்டம் வரும் வெள்ளிக்கிழமை (24 மார்ச்) நடைபெறவுள்ளது.
அந்த யூரோ 2024 தகுதிச்சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் நெதர்லந்துடன் மோதும்.
-AFP