'கத்தார்தான் கடைசி' - உலகக் கிண்ணப் போட்டிகளில் அதுவே இறுதி... லியோனல் மெஸ்ஸி உறுதி...
காற்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), கத்தார்தான் தமது கடைசி உலகக் கிண்ணப் போட்டி என்று கூறியுள்ளார்.
அர்ஜெண்டினாவின் முன்னிலை (Argentina) வீரரான 35 வயது மெஸ்ஸி 4 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.
உலகக் கிண்ணப் போட்டிகளில் 19 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள அவர், 6 கோல்கள் போட்டிருக்கிறார்.
மேலும் 5 கோல்கள் போட உதவியிருக்கிறார்.
'கத்தார் 2022', மெஸ்ஸி விளையாடவுள்ள 5ஆவது உலகக் கிண்ணப் போட்டி.
"இது நிச்சயமாக எனது கடைசி உலகக் கிண்ணப் போட்டியாக இருக்கப்போகிறது,"
என மெஸ்ஸி ESPN செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
உலகக் கிண்ணப் போட்டிக்கான நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் தமக்கு, போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற பதற்றம் அதிகம் உள்ளதாகச் சொன்னார்.
2005ஆம் ஆண்டு அனைத்துலக காற்பந்தாட்டப் போட்டியில் முதல் முறையாகக் களமிறங்கிய மெஸ்ஸி, அர்ஜெண்டினாவுக்காக 164 முறை விளையாடி 90 கோல்கள் போட்டுள்ளார்.
FIFA உலகக் காற்பந்துத் தரவரிசையில் 3ஆம் இடத்தில் இருக்கும் அர்ஜெண்டினா, C பிரிவில் உள்ளது.
அந்தப் பிரிவில் சவுதி அரேபியா (Saudi Arabia), மெக்சிகோ (Mexico), போலந்து (Poland) ஆகியவை உள்ளன.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி அடுத்த மாதம் (நவம்பர் 2022) 20ஆம் தேதி கத்தாரில் தொடங்கவிருக்கிறது.